ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க கோரி "இராவண பக்தர்கள்" தீர்மானமாம்.. கொந்தளிப்பது பாஜக எச்.ராஜா
சென்னை: திமுக இளைஞரணியின் சேலம் மாநாட்டில் ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் ஆளுநர் பதவியை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் பதவியை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தில், மக்களாட்சியின் மாண்பு என்பது ஜனநாயகப் பூர்வமான தேர்தல் களத்தில் வாக்காளர்களாகிய மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றத்தின் சுயாட்சிமிக்கச் செயல்பாடுகளேயாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சியில்லாத மாநில அரசுகளை, நியமனப் பதவியான ஆளுநர் பதவியைக் கொண்டு செயல்படவிடாமல் தடுக்க முயற்சித்து, ஆளுநர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்துவதற்குத் திட்டமிடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கினைக் கண்டிப்பதுடன், ஆளுநர் பதவி என்ற தொங்கு சதை'யை நிரந்தரமாக அகற்றுவதே, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தீர்வு என இம்மாநாடு தீர்மானிக்கிறது என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஆளுனர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டுமாம். இராவண பக்தர்கள் தீர்மானம். ஆனால் ஆளுனரை நிரந்தரமாக நீக்க அரசியல் சட்டத்தில் மாநிலத்திற்கு எந்த அதிகாரமும் தரப்படவில்லை. ஆனால் ஊழல் மாநில அரசை நீக்க மத்திய அரசுக்கு அரசியல் சட்டத்தில் அதிகாரம் உள்ளது. இந்து விரோதிகள் இதை உணர வேண்டும். இவ்வாறு எச்.ராஜா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications