திமுகவில் சீட் மறுப்பு- அதிருப்தி தலைகளுக்கு பாஜக வலை ... எந்த நேரத்திலும் விக்கெட்டுகள் வீழலாம்!
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் சிட்டிங் திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டங்களின் பிரமுகர்களுக்கு வலைவீசும் பணியை ஜரூராக நடத்திக் கொண்டிருக்கிறதாம் பாஜக.
திமுக, அதிமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏக்களில் கணிசமானவர்களுக்கு சீட் தரப்படவில்லை. இதனால் ஆங்காங்கே அதிருப்தி குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

திருப்பரங்குன்றம் சரவணன்
இந்த குழம்பிய குட்டையில் மீன்பிடித்துவிடலாம் என்கிற கோதாவில் பாஜக குதித்திருக்கிறது. இதில்தான் முதல் விக்கெட்டாக திருப்பரங்குன்றம் சரவணனை அலேக்காக தூக்கி பாஜக வேட்பாளராகவும் அறிவித்திருக்கிறது.

சிட்டிங் எம்.எல்.ஏக்களுடன் பேச்சு
இதனையடுத்து சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பட்டியலை வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைகளை மும்முரமாக நடத்திக் கொண்டிருக்கிறதாம் பாஜக. பாஜகவுக்கு வந்தால் உங்களுக்கு என்ன ஆதாயம் என்ற விவரமும் ஒளிவுமறைவின்றி சொல்லப்படுகிறதாம்.

விழக் காத்திருக்கும் விக்கெட்டுகள்
இதில் சபலப்படும் சில சிட்டிங் எம்.எல்.ஏக்கள், பிரமுகர்கள் எந்த நேரத்திலும் பாஜக முகாமுக்கு மாறலாம் என கூறப்படுகிறது. ஆனால் திமுக தரப்போ, கட்சியில் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியில் இருப்பவர்களுக்குதானே சீட் மறுக்கப்பட்டது. அவர்கள் கட்சி தாவுவதால் எந்த இழப்பும் இல்லை என்கின்றனர்.

இதுதான் பாஜக ஆட்டம்
பொதுவாகவே பாஜக இப்படித்தான் அதிருப்தியாளர்களுக்கு வலைவீசும். பின்னர் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு வலைவீசும். அந்த கட்சி இந்த கட்சி கூட்டணி கட்சி என்றெல்லாம் எம்.எல்.ஏக்களை பார்க்காது. பாஜகவின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையை எப்படியாவது அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அதன் ஒரே இலக்கு. அதனால் தேர்தலுகுப் பின் பாஜகவின் சித்து விளையாட்டுகள் தீவிரமாகவே இருக்கக் கூடும்.












Click it and Unblock the Notifications