டெல்லிக்கு வாங்க..கூட்டணி கட்சிகளுக்கு சீக்ரெட் மெசேஜ்! பறக்கும் முக்கிய ‘தலைகள்’.. பாஜக பரபர ப்ளான்
சென்னை: மக்களவைத் தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கூட்டணி கட்சியினரை டெல்லிக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளது பாஜக தலைமை. தேர்தலுக்கு பிந்தைய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையில் பங்கேற்க வருமாறு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று இருக்கும் நிலையில், நாளை இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

நாளை தேர்தல் முடிவுகள் வந்ததும், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும். தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்திய திருநாட்டை அடுத்து ஆளப்போகும் பிரதமர் யார் என்பதை அறிய அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
நாளை தேர்தல்: கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரச்சாரமானது நேற்று மாலையுடன் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை நடைபெறுகிறது. லோக்சபா தேர்தல் 2024 கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல் எட்டு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சில பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதாக காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக மோடி: பாஜகவை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக போகிறார், 400 தொகுதிகளுக்கு மேல் வென்று பாஜக நிச்சயம் ஹாட்ரிக் வெற்றி பெறும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர். தற்போது பிரசாரம் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்து வருகிறார்.
இந்தியா கூட்டணி: அதற்கு பிறகு அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். நாளை தேர்தல் நடைபெறும் உபியின் வாரணாசியில் பிரதமர் மோடி களமிறங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜகவுக்கு மாற்று என்ற முழக்கத்தோடு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைந்திருக்கின்றன. இதை அடுத்து நாளை அந்த கூட்டணியின் முக்கிய கூட்டமானது டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதில் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
கூட்டணி கட்சிகள்: வாக்கு எண்ணிக்கை, வாக்கு எண்ணிக்கை பிறகான நிலைப்பாடு, வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையில் தலைவர்கள் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நாளை டெல்லியில் அனைத்து இந்தியா கூட்டணி தலைவர்களும் சந்திக்க இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின்படி பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சித் தலைவர்களை பாஜக தலைமை டெல்லிக்கு அழைத்திருப்பதாக கூறப்படுகிறது.
முக்கிய ஆலோசனை: அமமுக, பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சி பிரநிதிகளையும், அன்புமணி ராமதாஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு ரகசியமாகவே இருப்பதாகவும் வாக்கு எண்ணிக்கைக்கு அடுத்த நாள் அவர்கள் டெல்லிக்கு செல்லலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும் பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கூட்டணி கட்சிகள் இருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டின் பேரிலேயே பாஜக, கூட்டணி கட்சிகளை டெல்லிக்கு வரவழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications