“டேய்.. நீயே அமாவாசை தானே” - அமைச்சரை ஒருமையில் பேசிய பா.ஜ.க நிர்வாகி.. வீடியோவால் பரபரப்பு!
சென்னை : பா.ஜ.க மாநில தலைவர் குறித்து ஒருமையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தமிழக பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
அண்ணாமலை பற்றி தரக்குறைவாக பேசினால், நாங்களும் அதே பாஷையில் பதிலடி தருவோம் என தி.மு.கவுக்கு தமிழக பா.ஜ.க செயலாளர் கராத்தே தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
6 மொழிகளை பேசுவேன்.. குடும்ப கஷ்டத்துக்கு ஸ்விக்கியில் வேலை.. போலீஸால் தாக்கப்பட்ட ஊழியர் கண்ணீர்
இதுதொடர்பாக வீடியோ பதிவு வெளியிட்டுள்ள கராத்தே தியாகராஜன், அந்த வீடியோவில், அமைச்சர் தா.மோ.அன்பரசனை ஒருமையில் கடுமையாகப் பேசியுள்ளார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன்
சமீபத்தில் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன், "உங்கள் டாடி மோடியிடம் சொல்லி மேகதாது அணை கட்டும் பணியை நிறுத்துங்கள். பின்னர் வந்து பேசுங்கள். அதை தடுத்துவிட்டு இங்கு வந்து பாஜக அரசியல் செய்ய வேண்டும். அன்று முற்றுகை போராட்டத்தின்போது போலீசார் அண்ணாமலையை தேடினால் ஆட்டோவில் ஏறி ஓடிவிட்டார். ஒருவாரம் சிறையில் அடைத்தால் கட்சியே வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள். நாங்கள் எல்லாம் சிறை என்றால் பெட்டியை தூக்கிக் கொண்டு போய்விடுவோம். இவர்கள் பெயரைக்கூட என் தகுதிக்கு சொல்வதில்லை. ரொம்ப ஆட்டம் போட்டால் வாலை ஒட்ட அறுத்து சுண்ணாம்பு போட்டுவிடுவோம்." எனக் கடுமையாகப் பேசினார்.
பாஜக கண்டனம்
அமைச்சர் தா.மோ.அன்பரசனின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "அமைச்சர் அன்பரசன் பிரதமர் மோடியையும், அண்ணாமலையையும் ஒருமையில் பேசியுள்ளதோடு, 'வாடா போடா' என்றும், பொறுக்கி என்றும், அதிகம் பேசினால் அவரை 'ஒழித்து கட்டுவேன்' என்று கொலை மிரட்டல் விடுத்திருப்பதும், தன் கட்சி தொண்டர்களிடம் விட்டால் 'நாறி போய்விடும் ஜாக்கிரதை' என்றும் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒருமையில் பேசவும், ரௌடிகளை போல் பேசவும் பாஜகவினருக்கும் பேச தெரியும். ஆனால் பேசமாட்டார்கள். ஆனால் அப்படி பேசும் பொறுக்கிகளை நொறுக்கி தள்ளிய போலீஸ் தான் அண்ணாமலை என்பதை அன்பரசன் 'மரியாதையாக' புரிந்து கொள்வது நல்லது." எனத் தெரிவித்திருந்தார்.
பதிலடி
இந்நிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு பதிலடி தரும் வகையில், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசியுள்ள கராத்தே தியாகராஜன், "அமைச்சர் தா.மோ.அன்பரசன் பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையையும் தரக்குறைவாக பேசுகிறார். பா.ஜ.கவினரை தரக்குறைவாக பேசுவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.
அமைதிப்படை அமாவாசை
அமைதிப்படை படத்தில் வரும், அமாவாசை 'கேரக்டர்' போல், 'கன்டோன்மென்ட்' சண்முகம் எம்.எல்.ஏ. வீட்டில் வேலை செய்து, அவரது பதவியை காலி செய்து, மாவட்ட செயலாளர் ஆனவர் அன்பரசன். அவர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசுகிறார். பாஜக தொண்டர்களை ஒட விடுவேன் என நீங்கள் பேசலாமா?
நாங்க எவ்வளவு பேசலாம்?
பாஜக ஆளும் 17 மாநிலங்களின் ஜெயிலையும் பார்க்க தயாராக இருங்கள். சீக்கிரம் திகார் ஜெயிலை பார்க்க ரெடியாக இருங்கள். பெட்டி படுக்கையுடன் ரெடியாக இருங்கள். தமிழக போலீசை நம்பி நீங்கள் இவ்வளவு பேசும்போது சி.பி.ஐ., வருமான வரித் துறை, அமலாக்கத் துறை போன்றவற்றை வைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளவு பேசலாம்?
பயந்து கிடக்கிறார்
தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து, காலில் விழாத குறையாக வணக்கம் வைத்தார். நான் அப்போது ஐ.என்.எஸ் விமான தளத்தில்தான் இருந்தேன். அந்த மாதிரி வணக்கத்தை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு டி.ஆர்.பாலு எங்களை பார்த்து பயந்து கிடக்கிறார்.
மூன்று கேட்டகிரியில் பேசத் தெரியும்
பாஜக தலைவர் அண்ணாமலையை பற்றி தரக்குறைவாக பேசினால், நாங்களும் அதே பாஷையில் பதிலடி தருவோம். எங்களுக்கும் ஏ, பி, சி என, மூன்று கேட்டகரியிலும் பேசத் தெரியும். திமுக தலைவர் ஸ்டாலினிடம் போய் கேட்டு பாருங்கள். திமுகவை சமாளித்து தான் இங்கு அமர்ந்திருக்கிறோம்.
அமைச்சர் மாதிரி
இரவோடு இரவாக தூக்கிச் சென்று விடுவார்கள். அமைச்சர் மாதிரி நடக்க வேண்டும். மரியாதையாக பேச கற்றுக் கொள்ளவும். பிரதமர் மோடி பற்றியும், அண்ணாமலை பற்றியும், பாஜக தொண்டர்கள் பற்றியும் தரக்குறைவாக பேச வேண்டாம். உங்க கட்சிக்காரர்களே உங்களைப் பற்றி நிறைய தகவல் சொல்கிறார்கள். அந்தப் பஞ்சாயத்தைப் பாருங்கள்." எனக் கடுமையாகப் பேசியுள்ளார் கராத்தே தியாகராஜன். (அவர் ஒருமையில் பேசிய வார்த்தைகள் திருத்தப்பட்டுள்ளன).