காவியும் வேணாம்.. வெள்ளையும் வேணாம்! சும்மா ஸ்டைலா கெத்தா.. கோட்சூட் வள்ளுவர்.. குஷ்புவின் குசும்பு!
சென்னை : திருவள்ளுவர் தினமான இன்று வள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பாஜகவை சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு வித்தியாசமான முறையில் திருவள்ளுவரின் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வசிக்கும் தமிழர்களிடையே வழக்கமான உற்சாகத்தோடும் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று உழவுத் தொழில் உற்ற நண்பனான கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கலாகவும் கொண்டாடப்படும் நிலையில், காளைகளையும், பசுக்களையும் தயார் செய்து அவற்றிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர் உழவர்கள்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே வருகைக்கு எதிர்ப்பு- யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் போராட்டம்!
திருவள்ளுவர் தினம்
பண்டிகை பொங்கல் பண்டிகை மட்டுமல்லாமல் உலகிற்கு திருக்குறளை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினமும் இன்று கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வாழ்த்துகள்
இதேபோல தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்திய நிலையில் தலைவர்கள் பலரும் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
காவி சர்ச்சை
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக இதே புகைப்படத்தை பாஜகவினர் பயன்படுத்தி வரும் நிலையில் திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தை ஒட்டி வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ள பிரதமர் மோடி திருவள்ளுவர் படத்தையே பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் பாஜகவை சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு வித்தியாசமான முறையில் திருவள்ளுவரின் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
நடிகை குஷ்பு
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் கோட் சூட் உடையுடன் டிப்டாப்பாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் நடிகை குஷ்பு" உலகமே கொண்டாடும் ஒவ்வொரு தமிழனின் பெருமையை கொண்டாடுவோம்' என திருவள்ளுவர் படத்துடன் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாஜகவினர் அனைவரும் காவி உடையுடன் திருவள்ளுவரை பகிர்ந்திருக்கும் நிலையில் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குஷ்புஇவ்வாறு பதிவிட்டாரா எனவும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.