மீண்டும் ஃபீல்டுக்கு வந்த பாஜக கே.டி ராகவன்.. நேரா போனது சென்னை புழல் சிறை.. 'அவரு' பேரு சொல்லலையே?
சென்னை: ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கி பாஜக பொறுப்புகளில் இருந்தும் தீவிர அரசியலில் இருந்தும் விலகியிருந்த தமிழக பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கி இருக்கிறார்.
தமிழக பாஜகவின் 'டிவி' முகங்களில் ஒருவராக இருந்தவர் கே.டி.ராகவன். பாஜகவில் கிடுகிடுவென உயர்ந்து மாநில பொதுச்செயலாளர் பதவியை பிடித்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி குறித்த விவாதங்கள் வரும் போது கே.டி.ராகவன் பெயரும் தவறாமல் அடிபடும் அளவுக்கு இருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற தருணம்.. 2021-ம் ஆண்டு ஆபாச வீடியோ சர்ச்சையில் கே.டி.ராகவன் சிக்க அத்தனையும் தலைகீழாகப் போனது. இந்த ஆபாச வீடியோ சர்ச்சையால் பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் ஒட்டுமொத்தமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். பின்னர் கே.டி.ராகவன் உடல்நலன் பாதிக்கப்பட்ட போது அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். கே.டி.ராகவன் நடத்திய புதுமனை புகுவிழாவுக்கும் பாஜக தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்தினர். இருந்தாலும் தீவிர அரசியல் பக்கம் களப் பணிகளில் நேரடியாக ஈடுபடாமல் இருந்தார் கே.டி.ராகவன். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில கருத்துகளையும் பாஜக தலைவர்களின் பதிவுகளையும் பகிர்ந்து வந்தார் கே.டி.ராகவன்.
இந்நிலையில் இன்று தமது எக்ஸ் பக்கத்தில் ஒரு படத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார் கே.டி. ராகவன். அதில், சென்னை புழல் மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு இருக்கும் பாஜக பொறுப்பாளர்களை இன்று சந்தித்தோம்...உடன் மாநில செயலாளர் S .G . சூர்யா.. மாநில இளைஞரணி பொது செயலாளர் மோகன் மற்றும் இளைஞரணி சகோதரர்களுடன் முன்னாள் மாவட்ட தலைவர் சென்னை சிவா என்று மட்டும் பதிவிட்டுள்ளார்.

ஆனால் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள பாஜக நிர்வாகிகளான அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் பெயரை கே.டி.ராகவன் தமது பதிவில் குறிப்பிடவில்லை. பொதுவாக பாஜக பொறுப்பாளர்களை மட்டுமே சந்தித்தேன் என கே.டி.ராகவன் தமது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications