ஸ்டாலின் நல்லாயிருக்கணும்.. அவருக்கு ஒரு பிரச்னைன்னா சும்மாயிருக்க மாட்டோம்.. குஷ்பு பரபரப்பு பேச்சு
முக ஸ்டாலின் மீது குற்றச்சாட்டை முன்வைத்த குஷ்பு
சென்னை: ஸ்டாலினுக்கு ஒரு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டாலும் நாங்கள் குரல் கொடுப்போம் என்று பாஜகவின் குஷ்பு பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி, பிறகு பாஜகவில் இணைந்துள்ளார் குஷ்பு.. பிறகு நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது திமுக மீது புகார்களை முன்வைத்திருந்தார்.
அத்தனை காலமும் இல்லாமல், திடீரென குற்றச்சாட்டை, அதுவும் ஒரு பிரச்சார களத்தில் திமுக மீது வாரி இறைத்திருந்தார்.

ஸ்டாலின்
"அன்னைக்கு என் மேல செருப்பை வீசினாங்க.. முந்தானையை பிடிச்சு இழுத்தாங்க.. திமுகவில் இருக்கும் பெண்கள் திட்டமிட்டே என்னை அசிங்கமாக பேசினாங்க.. ஸ்டாலினிடம் இதுகுறித்து புகார் தர போனால், அவர் என்னை பார்க்காமலேயே தவிர்த்து விட்டார்... எல்லாத்துக்கும் காரணம் ஸ்டாலின்தான்" என்று கூறியிருந்தார்.. குஷ்புவின் இந்த குற்றச்சாட்டு, அப்போதைய தேர்தல் சூட்டிலும் பெரும் அனலை அள்ளி கொட்டியது.

குஷ்பு
இப்படிட்ட சூழலில்தான் திமுக ஆட்சி அமைந்ததும், குஷ்பு மறுபடியும் திமுகவில் சேர போவதாக ஒரு தகவல் கசிந்தது.. ஸ்டாலினை சந்திக்க டைம் கேட்டுள்ளதாகவும், ஆனால், ஸ்டாலினின் தரப்பு இதை எதிர்த்ததாகவும் செய்திகளை சில பத்திரிகைகளும் வெளியிட்டிருந்தன.. ஆனால், இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்தார் குஷ்பு.. வேறு ஒரு பாதையில் பயணித்து கொண்டிருக்கிறேன் என்று விளக்கம் தந்து, தன்னுடைய கண்டனத்தையும் வலுவாக பதிவு செய்திருந்தார். இந்நிலையில்தான், முதல்வர் ஸ்டாலின் தொடர்பாக மீண்டும் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார் குஷ்பு..

பஞ்சாப்
செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, "பஞ்சாபில் நிகழ்ந்ததை பார்க்கும்போது, இது நிச்சயமாக சதி என்றே தெரிகிறது.. ஒரு நாட்டின் பிரதமர், மாநிலத்துக்குள் எந்த வழியாக வருகிறார், எப்படி வருகிறார், எந்த வழியாக போக போகிறார், என்றெல்லாம் எனக்கு தெரியாது என்று அம்மாநில முதலமைச்சர் சொல்கிறார்.. அதெப்படி தெரியாமல் இருக்கும்? இது பொய் என்றே தெரிகிறது.. பொதுவாக ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு ஒரு அமைச்சர் போனாலேயே அத்தனை பாதுகாப்பு வசதிகளையும் செய்து தருவார்கள்.. ஆனால் பிரதமரே வரும்போது, எனக்கு அது தெரியாது என்று சொல்வதை ஏற்க முடியாது..

அமைச்சர்
ஒரு பிரதமரை கட்சிக்கு அப்பாற்பட்டுதான் பார்க்க வேண்டும்.. அவர் எல்லாருக்கும் பிரதமர்.. வாக்களிக்காத மக்களுக்கும் அவர் பிரதமர்தான்.. காங்கிரஸ் தரப்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.. ராகுல்காந்தி இந்தியாவில் இருந்தாலே, ஹாலிடே மூடில்தான் இருப்பார்.. இது சம்பந்தமாக இன்னும் வாயே திறக்கவில்லை.. பஞ்சாப் முதல்வர் சன்னி மன்னிப்பு கேட்க வேண்டும், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லாவிட்டால் நாங்கள் இப்படித்தான் போராடி கொண்டே இருப்போம்" என்றார் குஷ்பு.

குற்றச்சாட்டு
"பஞ்சாப் முதல்வர் ஒரு தலித் என்பதால்தான், பாஜக இப்படி ஒரு குற்றச்சாட்டை அவர் மீது வைக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு குஷ்பு, "ஏங்க, அப்படின்னா இந்தியா முழுவதும் அவர் ஒருத்தர்தான் தலித் சிஎம்-ஆக நாம பார்க்கிறோமா? வேற மாநிலத்தில் தலித் சிஎம் கிடையாதா? அவங்க தப்பு பண்ணிட்டு, எப்படி பாஜக மேல சொல்ல முடியும்?

பாதுகாப்பு குறைபாடு
தமிழக முதல்வர் ஒவ்வொரு விஷயத்தையும் பற்றி பிரதமரிடம் பேசுகிறாரே, கடிதம் எழுதுகிறாரே.. அப்படி இருக்கும்போது, பஞ்சாப்பில் நடந்த இந்த மாதிரி பாதுகாப்பு குறைபாடு பற்றி ஏன் ஒரு வார்த்தைகூட இதுவரை பேசாமல் இருக்கிறார்? ஏன் கண்டனம் சொல்லல? ஏன் கேள்வி எழுப்பல? நவீன் பட்நாயக் உட்பட எத்தனையோ முதல்வர்கள் இதை பற்றி பேசியிருக்காங்க.. ஏன் ஸ்டாலின் ஒரு வார்த்தைகூட பேசல? உங்க கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறார்கள் என்பதற்காக இப்படியா?

கண்டனம்
ஸ்டாலின் நீண்ட ஆயுளுடன் வாழ நாம ஆசைப்படறோம்.. ஏன்னா, அவர் நம்ம முதலமைச்சர்.. ஆனால், நாளைக்கு ஸ்டாலினுக்கே ஏதாவது ஒரு பாதுகாப்பு குறை ஏற்பட்டால் நாம கண்டனம் சொல்ல மாட்டோமா என்ன? நிச்சயம் சொல்வோம்.. பிரதமர் பாதுகாப்பு குறை விவகாரத்துக்கு கண்டனம் சொல்ல வேண்டும்.. முக ஸ்டாலினுக்கும் பிரதமர் நரேந்திர மோடிதான்.." என்றார் குஷ்பு.












Click it and Unblock the Notifications