நடுரோட்டில் துரத்தி துரத்தி தாக்குதல்.. போதையில் அட்டகாசம் செய்த பாஜக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் கைது!
சென்னை: சென்னையில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் சட்டையைக் கிழித்து தாக்கிய புகாரில் பாஜக நிர்வாகி கார்த்திக் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் நேற்று ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனது ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளார். பட்டினப்பாக்கம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற கார் வழி விடாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மணிவண்ணன் தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முன்னால் சென்ற காரில் இருந்த 4 பேர் காரை விட்டு இறங்கி வந்து, மணிவண்ணனை காரில் இருந்து இறக்கி இழுத்துப் போட்டு அவரை கடுமையாகத் தாக்கி, சட்டையைக் கிழித்து சாலையில் ஓட விட்டனர்.
இவர்களிடம் தப்பி ஓடிய மணி வண்ணனை அந்த கும்பல் விரட்டி விரட்டி அடித்தது. இந்தச் சம்பவம் பொதுமக்கள் கண்முன்னே நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்து காவலர் வந்து சண்டையை விலக்கி விட முயன்றபோது, அந்த கும்பலில் ஒருவர் தான் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி என்று கூறி மிரட்டியுள்ளார். மேலும், நால்வரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உணவக உரிமையாளர் மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், கார் பதிவு எண்ணை வைத்து, தாக்குதல் நடத்திய அந்த கும்பலை தேடினர். இந்நிலையில், மதுபோதையில் மணி வண்ணனை தாக்கிய பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கார்த்திக் ராஜா, கோபி, சுடலையாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கார்த்திக் ராஜா, பாஜக மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளராக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோபிநாத், ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications