தமிழ் புத்தாண்டுக்கு ஒரு வாழ்த்து சொல்லல.. திமுகவுக்கு சவுக்கடி உறுதி.. கொதித்த நயினார் நாகேந்திரன்!
சென்னை: தமிழ்ப் புத்தாண்டுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சித்திரை 1 ஆம் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டாக பெரும்பாலான மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக அரசு, தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என அரசாணை வெளியிட்டு அதன்படியே செயல்பட்டு வருகிறது. இன்று அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், சித்திரை முதல் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறவில்லை என பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி 1 அன்று உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சித்திரை 1 அன்று மெளன விரதம் இருப்பது தமிழர்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயல்! தமிழர் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதலமைச்சரை, தமிழ்நாடு புறக்கணிக்கும்!
ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நண்பகல் கடந்தும் நமது தமிழ்நாடு மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களைப் புறக்கணித்து வருகிறார்.
மேலும், இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின் "ஆவின்" பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை. ஆங்கிலப் புத்தாண்டிற்கு அகிலத்திற்கெல்லாம் வாழ்த்து மடல் எழுதும் முதலமைச்சருக்கு ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களின் கலாச்சாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா?
தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கட்சி திமுக என விளம்பர வசனம் பேசிக் கொண்டு நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
தொடர்ந்து தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுக-விற்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம்" எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றதில் இருந்தே அதிரடி கருத்துகளைப் பேசி வருகிறார். அதிமுக - பாஜக கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சியை வேரறுக்க போகும் இந்தக் கூட்டணியால் முதல்வர் கண்ணில் மரண பயம் தெரிவதாக கூறியிருந்தார்.
மேலும், இன்னும் ஒரு வருடம்தான் உள்ளது. அதுவரை ஆடுங்கள் எனவும் விமர்சித்திருந்தார் நயினார் நாகேந்திரன். இன்று நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதும், திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications