திருமாவளவன் 'நாற்காலி சர்ச்சை..' சமத்துவம் பேசியது பொய்யா? சீண்டும் பாஜக.. விசிக தொண்டர்கள் பதிலடி
சென்னை: காலில் தண்ணீர் படாமல் நாற்காலி மீது ஏறி நின்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், திருமாவளவன் "பயணம்" செய்த சம்பவத்தை பாஜக தமிழ்நாடு இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் விமர்சனம் செய்திருக்கிறார்.
Recommended Video
சென்னை வேளச்சேரியில் திருமாவளவன் வசிக்கும் இடத்தில் தரை பகுதியில் மழை தண்ணீர் சூழ்ந்து விட்டது.
இந்த நிலையில்தான் நாடாளுமன்றம் செல்வதற்காக அவர் விமான நிலையம் நோக்கி காரில் கிளம்ப வேண்டியது இருந்தது. புதிய உடை மற்றும் காலில் ஷூ அணிந்து திருமாவளவன் கீழே வந்தபோது தண்ணீரில் கால் படும் என்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் இரும்பு நாற்காலிகளை கொண்டு சென்று போட்டனர்.

சேர் மீது
அந்த சேர் மீது திருமாவளவன் ஏறி நின்றார். அதை தொண்டர்கள் இழுத்தபடியே வந்தனர். வெளியே நின்ற கார் வரை திருமாவளவனை நாற்காலியில் இழுத்து கொண்டு வந்த தொண்டர்கள் அவரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக சுற்றி வரும் நிலையில்தான் வினோஜ் செல்வம் ட்வீட்டரில் இதுதொடர்பாக வீடியோவை பதிவு செய்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பாஜக தலைவர்
வினோஜ் செல்வம் கூறுகையில், என்ன திருமாவளவன், சார்? கூட இருக்குறவங்கள இப்படி தான் நடத்துவீங்களா? சமூக நீதி, சமத்துவம்னு கம்பு சுத்துறதெல்லாம் சும்மா தானா? மழை தண்ணில கால் வச்சு உங்களால நடக்க முடியாம பூர்வ குடி மக்களை அதிகாரம் பண்ணலாமா. அடங்கமறு! அத்துமீறு! இதுக்கெல்லாம் அர்த்தம் இதுதானா? இவ்வாறு வினோஜ் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக காயத்திரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், வீர செயல், அவர் மக்களை காப்பாற்றப் போகிறார். இவ்வாறு தெரிவித்துள்ளார்

சேறு, சகதி
இருப்பினும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். அவர் பார்க்காத, சகதியா சேறா என்று ஒரு நெட்டிசன் பதில் அளித்துள்ளார். அதில் திருமாவளவன் சேறு மற்றும் சகதியில் நடந்து செல்லும் பழைய புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

காலில் காயம்
காலில் காயம் உள்ளது. தண்ணீரில் கால் படக்கூடாது என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறி இருக்கிறார்கள். வீட்டை சுற்றிலும் மழை நீர் சூழ்ந்து இருக்கிறது. எனவே திருமாவளவனை, பாதுகாப்பு கருதி நாற்காலி மீது நடக்க வைத்து வாகனத்தில் ஏற்றி உள்ளார்கள் என்று கட்சித் தொண்டர் ஒருவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

காலில் வீக்கம் உள்ள போட்டோ
மற்றொரு தொண்டர், திருமாவளவன் காலில் வீக்கம் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நாங்கள் கல்வி கற்பதற்கு வாய்ப்புக்களை போராடி பெற்றுத்தந்த... எம் முதற்கடவுள் புரட்சியாளரும் பெற்ற வாய்ப்பை தொடர்ந்து நாங்கள் பயன்படுத்த போராடிக்கொண்டிருக்கும் எங்கள் முதல் உடன்பிறப்பு... எழுச்சியாளரும் நான் போற்றும் முதல் அரசியல் ஆசிரியர் திருமா அண்ணா. இவ்வாறு அந்த தொண்டர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications