காலில் விழுந்து பதவி பெற்று, காலை வாரும் கலையை கற்றவர்.. எடப்பாடி பழனிசாமி மீது பாஜக சரமாரி அட்டாக்
சென்னை: அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பாஜகவின் விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கடுமையாக சாடியுள்ளார்.
சென்னையில் திமுக பிரமுகர்கள் சொத்து, ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்திருந்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. பின்னர் திமுக பிரமுகர்களின் சொத்து விவரங்களை மட்டும் அவர் வெளியிட்டிருந்தார். அண்ணாமலை வெளியிட்ட விவரங்கள் பெரும் சர்ச்சையாக வெடித்தன.

அதேநேரத்தில் அனைத்து கட்சி ஊழல்களையும் வெளியிடுவேன் என அண்ணாமலை பேசியது இன்னொரு பரபரப்பானது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் இடம்பெற்றுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி தொடருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதனையே அதிமுக தலைவர்களும் கூறி வருகின்றனர். ஆனால் அண்ணாமலை மட்டும் இதற்கு எதிராக கருத்து கூறி வந்தார். இந்த பின்னணியில் அனைத்து கட்சித் தலைவர்களின் ஊழல்களையும் வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்தது.

திமுக சொத்து பட்டியல் ஒரு நகைச்சுவை காட்சி. இதில் அதிமுகவை சார்ந்தவர்களின் பட்டியலையும் வெளியிடுவாராம். அவசரத்துல கைய விட்டா அண்டாகுள்ள கூட கை போகாதுன்னு சொல்லுவாங்க. அண்ணாமலை பதட்ட படாம அரசியல் பண்ண வேண்டும் என அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் கூறியிருந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் என்றே அண்ணாமலை சொல்லி இருக்கிறார். அதிமுக என்று அவர் கூறவில்லை. இப்போது நான் சவால் விடுகிறேன். அதிமுக என அண்ணாமலை சொல்லட்டும்.. அதன் பிறகு நான் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கிறேன். எங்கள் ரியாக்சனை நீங்கள் பார்ப்பீர்கள் என எச்சரித்தார்.
அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, இனிமேல் அண்ணாமலை பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம். இப்படி பேசி பேசித்தான் அவர் பெரிய ஆளாகிறார். நான் கட்சிக்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. அண்ணாமலை இதுபோன்ற பேட்டிகளைக் கொடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். தயவுசெய்து அவர் தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். வேறெந்த கட்சியைக் குறித்தாவது கேளுங்கள். காரணம் அரசியல் கட்சிகளில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அப்படியானவர்கள் குறித்து கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அதைவிடுத்து தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை பேசி வருகிறார். அவர் ஏதாவது ஒன்றைப் பேசிவிடுகிறார். இதனால், அவர் குறித்த ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு எங்களைப் போன்ற தலைவர்கள் வந்துவிட்டோம். முதிர்ந்த அரசியல்வாதி கருத்து குறித்துக் கேட்டால் பதில் சொல்லலாம் என்றார்.
எடப்பாடி பழனிசாமியின் அண்ணாமலை மீதான இந்த நேரடி விமர்சனத்துக்கு பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து பதிலடி தந்து வருகின்றனர். இதன் உச்சமாக, பாஜக விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தமது ட்விட்டர் பக்கத்தில், ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம். அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாவம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications