இதெல்லாம் முக்கியம்.. அதிமுகவிடம் லிஸ்டை நீட்டி.. "ரெடியாக வந்த பாஜக".. இரவில் நடந்த நீண்ட மீட்டிங்!
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் கிடைத்த நிலையில்.. நேற்று சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் இரண்டு கட்சிக்கும் இடையில் முக்கியமான மீட்டிங் நடந்துள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியதில் இருந்தே அதிமுக மிக துல்லியமான திட்டங்களுடன் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது... இவ்வளவு இடங்கள்தான் கூட்டணி கட்சிகளுக்கு, இந்த தொகுதிகளைத்தான் ஒதுக்க வேண்டும் என்று முறையான திட்டங்களுடன் அதிமுக தனது கூட்டணி கட்சிகளை நடத்தி வருகிறது.
முதல்வர் பழனிச்சாமியும் அமைச்சர்கள் சிலரும்தான் இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளில் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக இதற்காக அதிமுக பல்வேறு மீட்டிங்குகளை நடத்தியது. நேற்று இரவு கூட முக்கியமான மீட்டிங் நடந்தது.
திட்டமிடல்
முதல்வர் இபிஎஸ் முறையாக திட்டமிட்ட காரணத்தால்தான் கூட்டணிக்கு அதிக இடங்களை ஒதுக்காமல் கட்டுப்படுத்தினார். இதன் மூலமே பாஜகவிற்கும் வெறும் 20 தொகுதிகள் கொடுத்து, சம்மதிக்க வைத்தார். கூட்டணி பேச்சுவார்த்தையில் இபிஎஸ் மிகவும் ஸ்டிரிக்ட்டாகவே செயல்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பாஜகவிற்கு 20 இடங்கள் ஒதுக்கி உள்ள நிலையில் எந்தெந்த தொகுதிகளை பாஜகவிற்கு கொடுக்க வேண்டும் என்று அதிமுக ஆலோசனை செய்து வருகிறது.
பாஜக
பாஜக வலுவாக இருக்கும் தொகுதிகள் எவை என்று கண்டறிந்து அந்த கட்சிக்கு 20 இடங்களை ஒதுக்க வேண்டும். கன்னியாகுமரி, கொங்கு மாவட்டங்கள், சென்னையில் சில தொகுதிகளை கண்டிப்பாக பாஜகவிற்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவிற்கு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் - பாஜக தலைவர்கள் இடையே தனியார் ஹோட்டலில் மீட்டிங் நடந்தது.
என்ன மீட்டிங்
அதிமுகவிடம் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிக்கான லிஸ்டை இந்த மீட்டிங்கில் கொடுத்து உள்ளது. 20 தொகுதிகள் கொடுக்கப்பட்ட நிலையில் 25 தொகுதிகள் அடங்கிய லிஸ்டை கொடுத்துள்ளது. இதில் 20 இடங்களை தேர்வு செய்யுங்கள்.. எங்களின் செல்வாக்கை வைத்தே தொகுதிகளை தேர்வு செய்துள்ளோம் என்று பாஜக கூறியுள்ளது. இதில் கன்னியாகுமரி, கொங்கு மாவட்டங்கள், சென்னையில் தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்று பாஜக குறிப்பிட்டுள்ளது.
ஆலோசனை
சில தொகுதிகள் மட்டும் முக்கியமாக வேண்டும்.. அதை விட்டுத்தர முடியாது என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது. இந்த ஆலோசனை மிகவும் சுமுகமாகவே சென்று இருக்கிறது. பாஜக குறிப்பிட்ட ஒன்றிரண்டு தொகுதிகள் தவிர வேறு எதிலும் அதிமுக களமிறங்கும் எண்ணத்தில் இல்லை. இதனால் பாஜக கேட்ட பெரும்பாலான தொகுதிகளை அந்த கட்சிக்கே அதிமுக கொடுக்கும் என்கிறார்கள்.
மாற்றம்
அதே சமயம் அதிமுக விரும்பிய சில தொகுதிகள் அந்த லிஸ்டில் இருந்துள்ளது.இதை மட்டும் அதிமுக எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக வேறு சில தொகுதிகளை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு தனியார் ஹோட்டலில் நீண்ட நேரம் இந்த மீட்டிங் நடந்துள்ளது. மீட்டிங்கின் முடிவில் இரண்டு கட்சியும் மனநிறைவோடு சென்றதாகவே கூறப்படுகிறது.
ஒற்றுமை
பாஜக வைத்த கோரிக்கைகள் அதிமுகவிற்கு ஏற்கும் வகையில்தான் இருந்துள்ளது. இரண்டு கட்சிக்கும் பெரிய அளவில் இந்த 20 தொகுதிகளை தேர்வு செய்வதில் உடன்படிக்கை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போதே பாஜகவின் வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என்கிறார்கள்.