5 மாநில பாஜக தேர்தல் அறிக்கை.. லவ் ஜிகாத் தடை சட்டம்.. தமிழகத்தில் மட்டும் மிஸ்ஸிங்.. இதுதான் காரணம்
சென்னை: கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில தேர்தல் அறிக்கைகளில் லவ் ஜிகாத் சட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ள பாஜக, தமிழ்நாட்டில் அது குறித்து வாய் திறக்கவில்லை.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த வாரம் தொடங்கி தேர்தல்கள் நடைபெறுகிறது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
தேர்தல் நெருங்க நெருங்க அனைத்து கட்சிகளும் பிரசாரங்களைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. தேசிய தலைவர்களும்கூட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய தேர்தல்
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பாஜகவிற்கு மிக முக்கியமான தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் அசாம் மாநிலத்தில் மட்டுமே பாஜக ஆளும்கட்சியாக உள்ளது. மேற்கு வங்கத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வென்றிருந்தது. அந்த வெற்றியை மீண்டும் சட்டசபை தேர்தலிலும் தொடர வேண்டும் என்று பாஜக எதிர்பார்த்து வங்கத்தில் களமிறங்குகிறது.
தென் மாநிலங்களில் மோசம்
தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக மிகவும் வீக்காகவே உள்ளது. இதனால்தான் அதிமுகவுடன் பாஜக கைகோர்த்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் பாஜக அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது. அங்கு பாஜகவுக்கு நேரடியாகச் செல்வாக்கு இல்லை என்பதால் நீண்ட இழுபறிக்குப் பின்னர் ரங்கசாமியின் என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. கேரளாவில் கூட்டணி அமைக்கச் சரியான வாய்ப்பு அமையாததால் அங்குத் தனித்துப் போட்டியிடுகிறது.
பாஜக தேர்தல் அறிக்கை
புதுச்சேரி தவிர அனைத்து மாநிலங்களுக்கும் பாஜக தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும், பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், பசுவதை தடைச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படும் போன்ற வாக்குறுதிகள் அனைத்து மாநில தேர்தல் அறிக்கைகளிலும் இடம்பெற்றுள்ளன. ஆனால் அசாம், மேற்கு வங்கம், கேரளா தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றிருந்த லவ் ஜிகாத் குறித்த வாக்குறுதி தமிழ்நாடு தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.
லவ் ஜிகாத் சட்டம்
லவ் ஜிகாத் சட்டம் உத்தரப் பிரதேசத்தில் முதலில் கடந்த 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வதாகவும், அதைத் தடுக்கவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக யோகி அரசு தெரிவித்தது. இருப்பினும், பல்வேறு வழக்குகளிலும் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.
பாஜக ஆளும் மாநிலங்கள்
சமூக அர்வலர்களிடையே இச்சட்டம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பாஜக இந்தச் சட்டத்தில் உறுதியாக உள்ளது. பாஜக ஆளும் கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற சட்டத்தை பாஜக கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற சட்டங்கள் இந்து வாக்காளர்களை எளிதில் கவரும் என்பதை பாஜக தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் லவ் ஜிகாத் சட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கிறது.
தமிழ்நாட்டில் இல்லை
அசாம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவின் தேர்தல் அறிக்கைகளில் லவ் ஜிகாத்தை தடுக்க தனியாகச் சட்டம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கை இது குறித்து வாய் திறக்கவில்லை. இந்து கோயில்களைப் பாதுகாப்போம், விவசாயத்தைப் பெருக்க நடவடிக்கை உள்ளிட்ட வாக்குறுதிகளே அதில் இடம்பெற்றுள்ளன.
காரணம் என்ன
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வாக்காளர்கள் கட்சியைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். பாஜக தேர்தல் அறிக்கையில் லவ் ஜிகாத் குறித்த வாக்குறுதி இடம் பெறாமல் போனதற்கு இதுவே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் சிறுபான்மையினர்கள் அதிமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். லவ் ஜிகாத் வாக்குறுதியும் இணைந்தால், சிறுபான்மையினர்கள் வாக்குகள் மட்டுமின்றி இந்துக்களின் வாக்குகளேகூட குறையலாம் என்பதால் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் அறிக்கையில் இது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.