பாஜக ஷாக்.. சொல்லி அடிக்கும் எடப்பாடி! அதிமுகவுக்கு தாவிய பாத்திமா அலி.. சொன்ன காரணம் தான் ஹைலைட்!
சென்னை: பாஜக தென் மாநில சிறுபான்மை அணி செயலாளர் பாத்திமா அலி பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார். இனியும் பாஜகவில் இருந்தால் இஸ்லாமியராக வாழ்வதற்கான தகுதியற்றுப் போய் விடுவேன் என பாத்திமா அலி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்த நிலையில், திடீரென அந்த கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுகவை தொடர்ந்து சீண்டி வந்த நிலையில், இனி பாஜக கூட்டணியில் அதிமுக இருக்காது என அதிரடி முடிவை எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. வரும் லோக்சபா தேர்தலில், அதிமுக, பாஜக தனித்தனி அணிகளாக களமிறங்குகின்றன.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவின் முன்னணி நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அதிமுகவிற்கு பதிலடி கொடுக்க அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேரை தங்கள் கட்சிக்கு இழுத்தது பாஜக. எனினும், அவர்களில் பெரும்பாலானோர் எம்ஜிஆர் கால எம்.எல்.ஏக்கள். தற்போது அரசியலில் ஆக்டிவ்வாக இல்லாதவர்கள்.
இந்நிலையில் தான், அதிமுக தரப்பு, பாஜகவில் இருந்து தீவிரமாக ஆட்களை எழுத்து வருகிறது. சுமார் 25 வருடங்களாக பாஜகவில் இருந்து, அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகிய நடிகை கவுதமி நேற்று தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார்.
இதனை தொடர்ந்து முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச் இயக்கத்தின் தலைவராகவும், பாஜக சிறுபான்மை அணியின் மாநில செயலாளராகவும் இருந்து வந்த பாத்திமா அலி, திடீரென பாஜகவில் இருந்து விலகி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாத்திமா அலி, "நாடு இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் சிறுபான்மை மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய கட்டாயத்தில் உள்ளேன். அதற்கு உதவி செய்யும் கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது இணைந்துள்ளேன். தொடர்ந்து பாஜகவில் இருந்தால் இஸ்லாமியராக வாழ்வதற்கான தகுதியே எனக்கு இல்லாமல் போய் விடும்.
பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்களும், இஸ்லாமியர்களின் வாழ்விடங்களும் குறிவைத்து தாக்கப்படும் சூழ்நிலையில் தொடர்ந்து அந்த கட்சியில் இருந்தால் நான் இஸ்லாமியராக இருப்பதற்கே தகுதி இல்லாதவளாக போய்விடுவேன். ராமர் கோயில் விவகாரம் முடிந்தது, அடுத்தது கிருஷ்ணர் கோயில் தான் என்று அங்கு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. மசூதிகள் இடிக்கப்படுகின்றன. அந்த நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதிமுக இறை மறுப்பு என்ற கொள்கையை என்றைக்கும் எடுத்ததில்லை. எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி ஜெயலலிதா தற்போது எடப்பாடியார் வரை சிறுபான்மை மக்களுக்கு அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். சிறுபான்மை இன மக்களுக்கு அதிமுகதான் என்றைக்கும் பாதுகாப்பு. அதனால் நானும் என்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முத்தலாக் தடை செய்ததன் மூலம் இஸ்லாமிய பெண்களின் வாழ்வை, அவர்களது குடும்பத்தை பாதுகாத்தது மத்திய அரசு என்றும், பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும், இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் இந்திய பெண்களின் வாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் பாத்திமா அலி முன்பு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ள எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையினரின் வாக்குகளை கவர முயன்று வருகிறார். எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதோடு, சிறுபான்மையின மக்களின் உண்மையான காவலன் அதிமுக தான் என்றும் பேசி வருகிறார். அவரது முயற்சிக்கு, பாத்திமா அலியின் வருகை வலு சேர்க்கும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications