மதசார்பின்மைனு சொல்றீங்களே! இந்து பண்டிகைக்கு மட்டும் ஏன் வாழ்த்தவில்லை?.. ஸ்டாலினுக்கு வானதி கேள்வி
சென்னை: இந்து பண்டிகைகளுக்கு மட்டும் ஏன் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதில்லை என பாஜக எம்எல்ஏவும் மகளிரணி செயலாளருமான வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து வானதி வெளியிட்ட ட்வீட்டில் CAA தீர்மானத்தில் "அனைத்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க " கூறும்
@CMOTamilnadu @mkstalin அவர்கள் , இந்து பண்டிகைகளுக்கு மட்டும் ஏன் வாழ்த்து தெரிவிப்பதில்லை ?
இந்துகளின் உணர்வுகளுக்குக்கு மதிப்பில்லையா? "மதசார்பின்மை " என்பது அனைத்து மதத்தையும் சமமாக
பார்ப்பது என தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

வங்கதேசம்
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வழி வகை செய்யும் திருத்த மசோதா கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இஸ்லாமியர்களின் பெயர்கள்
இதில் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து குடியேறிய இஸ்லாமிய சமூகத்தின் பெயர் இடம்பெறவில்லை என்பதால் இந்த சட்டத்திற்கு கடந்த இரு ஆண்டுகளாக எதிர்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்
அந்த தீர்மானத்தில் மக்களாட்சி தத்துவத்தின்படி ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது அந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும். ஆனால் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டமானது அகதிகளாக இந்த நாட்டிற்கு வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல் மத ரீதியாகவும் எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெளிவாகத் தெரிகிறது என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருத்துகள் மட்டுமல்லாது சிஏஏ சட்டத்திற்கு ஏன் எதிர்ப்பு என்பது குறித்த விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

பாஜக எதிர்ப்பு
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதித்தார். கொரோனா அதிகமாக பரவி வரும் சூழலில் இது போன்று ஊர்வலங்கள் நடத்தினால் அது மேலும் பாதிப்பை கொடுக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. எனினும் இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

மக்களின் கருத்து
மேலும் விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ள வானதி, அனைத்து மக்களின் கருத்தையும் உணர்வுகளையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும்..... பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் ஆகிய இரு வரிகளை மேற்கோள்காட்டி தமிழக அரசு இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications