இப்படியொரு கூட்டணியை தொடரும் வெட்கங்கெட்ட கட்சிக்கு எங்களை பற்றி பேச தகுதியே இல்ல.. பாஜக அட்டாக்!
சென்னை : மானங்கெட்ட காங்கிரஸ் கட்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி குறித்து பேசுவதற்கு தகுதி இல்லை என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக தற்போது மோடியின் மறுஉருவமாக உள்ளது. அதிமுகவால் தமிழகத்தில் பழைய வலிமையை மீண்டும் பெற முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்திருந்தார்.
அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், அவர்களை இயக்கப்போவது மோடி மற்றும் அமித்ஷா தான் என விமர்சித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு பாஜக கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது.

ஒரு பயனும் இல்லை
தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களத்தில், கட்சிகளுக்கு இடையேயான கருத்து மோதல்கள் உக்கிரமடைந்து வருகின்றன. அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் நீடிப்பது பற்றி வெவ்வேறு விதமான தகவல்கள் வரும் நிலையில், பாஜகவின் மறு உருவமாகச் செயல்படுவதால், அதிமுக பலவீனப்பட்டுக் கிடக்கிறது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்தார். அதிமுக மெகா கூட்டணி, மகா மகா கூட்டணி அமைத்தாலும் ஒரு பயனும் கிடைக்காது என்றும் அவர் விமர்சித்தார்.

மோடியின் மறு உருவம் அதிமுக
தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, "தமிழகத்தில் எங்களின் கூட்டணி என்பது கொள்கை ரீதியானது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரின் சித்தாந்தம், மதவெறி தாக்குதல்களை தடுப்பது என்ற ஒற்றை நேர்க்கோட்டில்தான் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம். இந்த கொள்கையை அதிமுகவினால் ஒருபோதும் கடைபிடிக்க முடியாது. அதிமுக என்பது மோடியின் மறு உருவம். அதனால்தான், அந்த கட்சி பலவீனப்பட்டு கிடக்கிறது.

வலிமை பெற முடியாது
அதிமுக மெகா கூட்டணி, அதைவிட மகா மகா கூட்டணி அமைத்தாலும் அதற்கு ஒரு பயனும் கிடைக்காது. ஏனெனில், அதை இயக்குபவர்கள் மோடியும், அமித்ஷாவும்தான். அதிமுகவை அவர்களே எப்போது இயக்க ஆரம்பிக்கிறார்களோ அப்போதுதான் தமிழக மக்கள் அவர்களை திரும்பிப் பார்ப்பார்கள். இன்னொருவரின் இயக்கத்தில் அவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தமிழகத்தில் பழைய வலிமையை பெற முடியாது.

வெட்கங்கெட்ட கட்சி
இந்நிலையில், அவரது பேச்சுக்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சொந்த கட்சியின் தலைவரை கொன்ற குற்றவாளிகளை ஆரத் தழுவி வாழ்த்துபவர்களுடன் கூட்டணியை தொடரும் வெட்கங்கெட்ட காங்கிரஸ் கட்சிக்கு, முன்னாள் பிரதமரை கொன்றவர்களை கொண்டாடும் கட்சிகளுடன் கூட்டணியை தொடரும் மானங்கெட்ட காங்கிரசுக்கு பாஜக - அதிமுக கூட்டணி குறித்து பேசுவதற்கு தரமும் இல்லை, தகுதியும் இல்லை" என கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications