வீரமணி மகனுக்கு 'விநாயகர் கோவிலில்' நடந்த திருமணம்... மறுப்பீங்களா? கொந்தளிக்கும் பாஜக நாராயணன்
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் மகன் அன்புராஜூக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் வினைதீர்த்த விநாயகர் கோவிலில்தான் திருமணம் நடந்தது என்பதை மறுக்க முடியுமா? என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் பாஜகவின் நாராயணன்.
பாஜகவின் நாராயணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் மகனும், மருமகளும் அத்திவரதர் தரிசனத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது என்ற என் பதிவினையடுத்து, சமூக வலைதளங்களில் அதை மறுத்து வருகிறார்கள் பகுத்தறிவு பகலவன்கள்(?).
சரி, இதோ இதையும் மறுப்பீர்களா? சுமார் 35 வருடங்களுக்கு முன் , கி.வீரமணியின் அவர்களின் மகன் அன்புராஜ் அவர்களுக்கு கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தின் எதிரில் உள்ள 'வினை தீர்த்த விநாயகர் கோவிலில்' திருமணம் நடந்ததை மறுக்க முடியுமா? அதன் பின் அந்த திருமணத்தை அதே சார்பதிவாளர் அலுவலகத்தில், வினை தீர்த்த விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற்றதாக பதிவு செய்ததை மறுக்க முடியுமா? அதற்கு உதவி புரிந்தது தியாகராய நகரை சேர்ந்த இரு பிராமணர்கள் என்பதை மறுக்க முடியுமா? அதில் ஒருவர் தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ள என் நண்பர் வேதசுப்ரமணியம் Vedasubramaniam Ananthanarayanan என்பதை மறுக்க முடியுமா? அந்த திருமணத்திற்கு தலைமை தாங்கியது, என் நண்பரும், முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் தான் என்பதை மறுக்க முடியுமா? வினை தீர்த்த விநாயகரின் அருள் பெற்று வாழ்க்கையில் இணைந்த அந்த தம்பதியினர் தான் இன்று கி.வீரமணிக்கு பக்க பலம் என்பதை மறுக்க முடியுமா?
அத்திவரதர் எழுந்து நடப்பாரா என்று கேட்ட கி. வீரமணி குணமடைந்து எழுந்து நடப்பதற்கு அத்திவரதரின் ஆசி பெற வினை தீர்த்த விநாயகரின் அருள் பெற்ற தம்பதியினர் சென்றிருந்தாலும் தவறில்லை.அவர்களின் பக்தி கி. வீரமணி அவர்களை நலமடைய செய்யும்.
எல்லாம் வேஷம்! வெறும் வெற்று கோஷம்!
இவ்வாறு நாராயணன் பதிவிட்டுள்ளார்.