அண்ணாமலையை “அவன் இவன்” என்பதா? காலியாகும் அதிமுக.. “கத்துக்குட்டி” கடம்பூர் ராஜு - பாஜக நாராயணன்
"கடம்பூர் ராஜு அவர்களே, எங்கள் கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். காலியாகிக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியை நீங்கள் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.”
சென்னை: அண்ணாமலையை ஒருமையில் பேசியதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை கத்துக்குட்டி என்று விமர்சித்து உள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர் காலியாகிக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியை நீங்கள் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் கடந்த வாரம் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
அவரை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த பல்வேறு பிரிவுகளின் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை மீது அடுத்தடுத்து குற்றச்சாடுகளை சுமத்தி கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததால் இரு கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது.

அண்ணாமலையை அவன் இவன் என்பதா?
திரு அண்ணாமலை அவர்கள் டெபுடேஷனில் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல்துறைக்கு திரும்பி விடுவார் என்றும் அவன், இவன் என்ற ஏக வசனத்தில் பேசியுள்ளதோடு, அரசியலில் கத்துக்குட்டி என்று விமர்சித்து பேசியிருப்பது அரசியல் அநாகரீகத்தின் வெளிப்பாடு.

அதிமுகதான் டெபுடேசனில் உள்ளது
டெபுடேஷனில் அரசியலில் இருப்பது அதிமுகதான் என்பதை கடம்பூர் ராஜு உணர வேண்டும். தமிழகத்தில் லஞ்ச, ஊழலை ஒழித்து கட்டி, நாகரீக அரசியலுக்கான மாற்றத்தை உருவாக்க தான் திரு.அண்ணாமலை அவர்களின் அரசியல் பிரவேசம் என்று கடம்பூர் ராஜு போன்ற அரசியல் கத்துக்குட்டிகளுக்கு தெரியாதது வியப்பல்ல.

ஜெயலலிதா சர்ச்சை
மேலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தமிழகத்தில் தான் என்பதையும், நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் உள்ள பாஜக அரசுக்கு மாற்றாக கண்ணுக்கெட்டிய காலம் வரையில் எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை என்று தெரியாமல் பேசுகிறீர்கள் கடம்பூர் ராஜு அவர்களே!
திரு.அண்ணாமலை அவர்கள் செல்வி ஜெயலலிதா அவர்களை பெருமைப்படுத்தியே பேசினார்.

கத்துக்குட்டி கடம்பூர் ராஜு
இதை கூட புரிந்து கொள்ள முடியாத, ஒரு சிறந்த தலைவரை போல், தான் இருப்பேன் என்று அண்ணாமலை அவர்கள் பேசியதில் ஜெயலலிதா அவர்களின் உறுதியான தன்மையை உணர்த்தியுள்ளார் என்பதையும் அறிந்து கொள்ள முடியாத ஒன்றும் தெரியாத கத்துக்குட்டி கடம்பூர் ராஜு தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

காலியாகும் அதிமுக
எது பெருமை, எது சிறுமை என்பது கூட புரிந்து கொள்ள முடியாதவர் செய்தி துறை அமைச்சராக எப்படி இருந்தார் என்பது வியப்பளிக்கிறது. கட்சியை அண்ணாமலை அவர்கள் காலி செய்து விடுவார் என்று சொல்லும் கடம்பூர் ராஜு அவர்களே, எங்கள் கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். காலியாகிக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியை நீங்கள் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.

காலம் பதில் சொல்லும்
மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணாதீர்கள். நெருக்கடி நேரங்களில் கை கொடுத்து, தோளோடு தோள் நின்றவர்களை அவதூறு பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். நாவடக்கத்தோடு அரசியல் செய்ய முயற்சியுங்கள். இல்லையேல் காலம் பதில் சொல்லும்." என்று அவர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications