அதெப்படி முதல்வர் வேட்பாளரை அதிமுக அறிவிக்கலாம்? பாஜகவின் பொன்னாருக்கு செமகோபமாம்!
சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் இருப்போம் என அடம்பிடிக்கிறது பாஜக. ஆனால் வேண்டா வெறுப்பாக பாஜகவை அதிமுக சுமந்து கொண்டிருக்கிறது.
ஓபிஎஸ் கோரிக்கை நிறைவேறியும் பலன் இல்லை.. வென்றது எடப்பாடி பழனிச்சாமி! ஒரே கல்லில் இரு மாங்காய்
அதிமுக அணிதான்...
ஒவ்வொரு தேர்தல் களத்திலும் பாஜகவை ஓரம்கட்டி வைத்துவிட்டுதான் அதிமுக பணிகளை மேற்கொள்கிறது. ஆனால் அவமானப்பட்டதை காட்டிக் கொள்ளாமல் நாங்க அதிமுக கூட்டணிதான் என சிரித்து கொள்கிறது பாஜக.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்
இப்போது அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக பெரும் பஞ்சாயத்துக்குப் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். சுமார் 3 மாதங்களாக அதிமுகவில் நீடித்த பெரும் அக்கப்போரே இன்றுதான் முடிவுக்கு வந்திருக்கிறது.
கொண்டாட்டத்தில் அதிமுக
முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்ததை அந்த கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்கின்றனர். ஆனால் இந்த அறிவிப்பால் பாஜக கடும் கோபத்தில் இருக்கிறதாம்.
பொன். ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக- பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என இப்போது அறிவிக்க தேவை இல்லை. தேர்தலின் போதுதான் அதிமுக பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
பாஜக மீது கோபம்
ஏற்கனவே பாஜகவின் பிடியில் சிக்கியிருப்பதாலேயே மிக மோசமான விமர்சனங்களை அதிமுக எதிர்கொண்டிருக்கிறது. இப்போது அதிமுகவின் உட்கட்சி விவகாரத்திலும் மூக்கை நுழைத்து அதை இப்ப செய்யாதே; அதை அப்புறமா செய் என்கிற சட்டாம்பிள்ளைத்தனமான இந்த பேட்டிகள் அதிமுகவினரை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளதாம்.