விஜய் உடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி? பாஜக தலைவர் சொல்வது இதுதான்! மாறும் தமிழக அரசியல் களம்!
சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தொங்கு சட்டசபை அமைந்தால் விஜய்யுடன் அதிமுக கூட்டணி அமைக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இதனை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் திட்டவட்டமாக மறுத்துள்ளார். விஜய் கட்சி உடனான கூட்டணிக்குத் தேவை ஏற்படாது எனக் கூறியுள்ள அவர், தமிழகத்தில் பெரும்பான்மையைப் பெற்ற என்டிஏ கூட்டணி ஆட்சியை அமைக்கும் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் நேற்றைய தினம் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், அனைத்திலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 85% வாக்குகள் பதிவானது. சதவிகிதமாகப் பார்க்கும்போது அதிகம் போலத் தெரிந்தாலும், பதிவான வாக்குகள் எனப் பார்க்கும்போது அது பெரியளவில் இல்லை.

தமிழ்நாடு தேர்தல்
இந்த தேர்தலில் திமுக, அதிமுக வலிமையான கூட்டணியை உருவாக்கிக் களமிறங்கின. விஜய் தரப்பும் ஒரு கூட்டணியை உருவாக்க முயன்ற போதிலும், அவர்களால் வலிமையான கூட்டணியை உருவாக்க முடியவில்லை. இதனால் விஜய் கட்சி தனித்துப் போட்டியிட்டது. மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய்யின் தவெக தனித்தே போட்டியிட்டது.
விஜய் அரசியல்
இதற்கிடையே பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபின் நியூஸ் 18 சேனலுக்கு அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். விஜய் குறித்த கேள்விக்கு அவர், "தமிழகத்தில் விஜய் ஃபேக்டர் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசியலில் பலர் தங்களுடைய சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பிக் களமிறங்குகிறார்கள்.. குறுகிய காலத்தில் அவர்களால் ஒரு இடத்தை உருவாக்க முடியும்.. ஆனால், நான் எப்போதும் சொல்வது ஒன்று தான் அரசியல் என்ற பிட்ச்-ல் ஒருவர் நீண்ட நேரம் நிலைத்து நிற்க வேண்டும்.
பெரிய ஆளுமைகள் அரசியலுக்குள் பிரம்மாண்டமாக நுழைவதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். ஆனால், அவர்கள் எந்த அளவிற்கு அடிமட்ட அளவில் தங்களை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள்.. எந்தளவுக்கு மக்களிடம் சென்று சேர்கிறார்கள் என்பது காலப்போக்கில்தான் தெரியும். விஜய் அவர்களுக்கு இது ஒரு தொடக்கமாக இருக்கலாம், ஆனால் அது ஒரு மிகப் பெரிய மாற்றமாக அமையும் என்று நான் நினைக்கவில்லை" என்றார்.

கூட்டணி?
எதிர்காலத்தில் விஜய்யுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர், "நாங்கள் ஏற்கனவே ஒரு வலிமையான கூட்டணியில் இருக்கிறோம். எங்களது கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்துதான் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். இன்றைய நிலவரப்படி அதற்குத் தேவை இருக்காது., தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி எனக் கருத்தில் கொண்டால் கூட, அந்த தேவை உருவாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியாக நாங்களே ஆட்சி அமைப்போம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.
தேவை இல்லை
மேலும், விஜய்யுடன் கைகோர்க்கும் கேள்விக்கே இடமில்லையா? என்ற கேள்விக்கு "அதற்கான தேவையே இருக்காது" என்று நிதின் நபின் பதிலளித்தார். மேலும், தமிழ்நாட்டில் தேவையான பெரும்பான்மை பெற்று என்டிஏ ஆட்சியை அமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நேற்றைய தினம் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் தான் விஜய் ஃபேக்டர் மாநிலத்தில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications