எடப்பாடிக்கு ஸ்கெட்ச் போட்ட மோடி! சேலம் நண்பன் யார்? கொங்குப் பகுதியை தட்டி தூக்கத் திட்டம்!
சென்னை: கொங்கு மண்டலத்தை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கைப்பற்ற பாஜக மெகா பிளான் போட்டு வேலை செய்து வருகிறது.
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய போது, அந்தப் பிரிவுக்குக் காரணம் அண்ணாமலையின் துடுக்கான பேச்சுதான் எனப் பரவலாக ஒரு கருத்து அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்களால் முன்வைக்கப்பட்டது.

அண்ணாமலை, திராவிட இயக்க முன்னோடித் தலைவரான அண்ணாவை அசிங்கப்படுத்திவிட்டார் என்றும் ஜெயலலிதாவை ஊழல்வாதி என விமர்சித்துவிட்டார் என்றும் கதை சொன்னார்கள்.
ஆனால், இப்போது பாஜக நகர்த்தி வரும் அரசியல் காய்களைக் கவனிப்பவர்களுக்கு ஒரு விசயம் மிக எளிதாகப் பிடிபட்டு இருக்கும். அது என்னவென்றால்? பாஜகவின் முழு கவனமும் இப்போது கொங்கு மண்டலத்தைச் சுற்றிச் சுழன்று வருகிறது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மொத்தம் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் 44 தொகுதிகள் கொங்கு மண்டலத்திற்கு உட்பட்டவை. குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் அதிமுகவுக்கு நல்ல வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தன.
அதாவது கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவைக் கைவிட்ட கொங்கு மண்டலம், சட்ட மன்றத் தேர்தலில் அப்படியே அந்த வரலாற்றை மாற்றிக் காட்டியது.
2019 மக்களவைத் தேர்தல் களம் 2 முக்கியமான விசயங்களை மையமாக வைத்து நடைபெற்றது. ஒன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. அடுத்து பொள்ளாச்சி பாலியல் விவகாரம். இந்த இரண்டையும்தான் திமுக தனது ஆயுதமாக முன்வைத்தது.

அந்தப் பொறியில் எடப்பாடி பழனிசாமி சரியாகச் சிக்கினார். அதன் விளைவு அதிமுக கடந்த 2019இல் தேனி தொகுதியைவிட, மற்ற அனைத்து இடங்களிலும் சுருண்டு விழுந்தது.
அப்போது அதிமுக கூட்டணியில்தான் பாஜக இருந்தது. கூடவே மோடி எதிர்ப்பும் திமுகவுக்குக் கைகொடுத்தது. அது மிகப்பெரிய அளவில் வேலை செய்தது.
இந்த முறை பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. வெளிப்படையாக திமுகவை மோடி விமர்சித்து வந்தாலும், அவர் உள்ளடியாக எடப்பாடி பழனிசாமியை காலி பண்ணும் வேலைகளில்தான் ஈடுபட்டு வருகிறார் என்பது பாஜகவின் தேர்தல் திட்டங்கள் மூலம் தெளிவாகி வருகிறது.
பாஜக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கொஞ்சம் பலமாக உள்ளது. அதைத்தாண்டி அந்தக் கட்சி தமிழ்நாட்டில் வேறு பகுதிகளில் வலு இல்லை. இந்தப் பார்வை கொஞ்சம் பழசானது.
புதிய அப்டேட் என்னவென்றால், கொங்கு மண்டலத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்துள்ளது. அது எந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்பது பற்றிச் சரியாக ரிப்போர்ட் உளவுத்துறை மூலம் அமித்ஷா கைக்குச் சென்றுள்ளது.
அதைக் கணக்குப் போட்டுத்தான் எடப்பாடி பழனிசாமியின் சமூக பின்னணி கொண்ட அண்ணாமலையை பாஜகவுக்கு மாநிலத் தலைவராக்கி உள்ளார் மோடி. இதுதான் எடப்பாடிக்கு வைக்கப்பட்ட முதல் செக்.
தமிழிசை செளந்தரராஜன் இருந்தவரை பாஜகவில் நாடார்களின் செல்வாக்கு கூடி இருந்தது. அந்தச் சமூக பின்புலத்தைக் கொண்ட தொழிலதிபர்கள் அந்தக் கட்சியின் வளர்ச்சிக்குப் பின்னால் நின்றனர்.
இப்போது அப்படியே கவுண்டர்கள் செல்வாக்கு பாஜகவில் கூடி உள்ளது. கூடவே நாடார்கள் செல்வாக்கும் சரி பகுதியாக நீடிக்கிறது. இப்போது ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜனை தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராகக் களம் இறக்க பாஜக முடிவு செய்திருப்பதும் அதற்காகத்தான்.
சொல்லப்போனால், அதிமுக கூட்டணியிலிருந்து கொண்டே பாஜக எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கைச் சரிக்கும் வேலைகளைச் செய்து வந்துள்ளது. அது அப்படியே வளர்ந்தால் 2026இல் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலையாக அறிவிக்கப்படுவார்.
அதனால் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு கேள்விக் குறியாகிவிடும் என்பதை அறிந்தே அவர் பாஜகவின் உறவைத் துண்டித்துக் கொண்டு துணிச்சலாக வெளியே வந்துள்ளார்.

சுமார் ஒரு மாதத்தில் 6 முறை தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார் மோடி. அவரின் முதல் டார்கெட் தென் தமிழ்நாடு.
2019இல் முதலில் ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி உரையாற்றினார். அதன்பின்னர் அவர் அங்கே போட்டியிட உள்ளதாகத் தகவல் பரவியது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ராமேஸ்வரத்திற்கு 2 நாள் பயணம் மேற்கொண்டார். அதன்பின்னர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். அங்கே ரூ.17,300 கோடி மதிப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் மோடியின் கவனம் முழுக்க கொங்கு மண்டலத்தை மையமாகக் கொண்டதாக மாறி உள்ளது.
அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலில் பல்லடம் வந்தார். அந்த ஊரின் அருகே பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
அவர் பாஜக ஆட்சியின் சாதனைகளை சொன்னதைவிட அங்கே எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவைப் பற்றிப் புகழ்ந்து பேசியதுதான் ஹைலைட் ஆக இருந்தது. ஜெ நல்லாட்சி தந்தார் என்றார்.
அதற்கு அதிமுக தலைவர்கள், 'பாஜகவை உருவாக்கிய அத்வானி, வாஜ்பாய் பெயரைச் சொல்லி வாக்கு கேட்கமுடியாத மோடி எங்களது தலைவர் ஜெயலலிதாவைச் சொல்லி வாக்கு கேட்கிறார்.
ஸ்ரீராமரைச் சொல்லி வாக்கு கேட்க முடியாது என்பதால், எம்.ஜி.ராமச்சந்திரனைச் சொல்லி வாக்கு கேட்கிறார் மோடி' என்று பதிலடி கொடுத்தனர்.
மோடி ஏன் எம்.ஜி.ஆரை சொல்ல வேண்டும். ஜெயலலிதாவைச் சொல்ல வேண்டும். அவர்கள் அதிமுகவின் தலைவர்கள் என மோடிக்குத் தெரியாதா? தெரியும். அவர்களின் அரசியல் வாரிசாக உள்ள எடப்பாடி பழனிசாமியை காலி செய்யத்தான் அவர் அதிமுக தலைவர்களைத் தனது மேடையில் முன்னிலைப்படுத்தினார்.
இப்போது சேலத்தில் ஜெயலலிதாவைப் பெண் என்றும் பாராமல் திமுக அசிங்கப் படுத்தியது என்கிறார். தனக்குச் சேலத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு நண்பர் இருந்தார் என்கிறார் மோடி. தனது கைலாஷ் யாத்திரை பற்றிப் பேசிய அவர், சேலத்தைச் சேர்ந்த ரத்தின வேல் என்பவரைப் பற்றிய கதையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் சேலத்தில் நண்பர் எனச் சொல்லும் ரத்தின வேல் யார் என்றே தெரியாது. 40 ஆண்டுகளாக யாரோ ஒருவரின் பெயரை ஞாபகம் வைத்துச் சொல்லும் அளவுக்கு அந்த நபர் முக்கியமானவர் இல்லை.
மோடி சொன்னது ஒரு உவமை கதை. அவர் தனது சேலம் நண்பர் என்றது எடப்பாடி பழனிசாமியைத்தான். அதை உருவகமாகச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
இப்போது மோடியின் டார்கெட் கொங்கு மண்டலம். அதாவது கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள். திமுக 2019 அதிக இடங்களைக் கைப்பற்றிய தொகுதிகள் இவை. இந்த முறை அது நடக்கக் கூடாது.
அதாவது அதில் சில பகுதி திமுகவுக்குப் போகலாம், ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவுக்குப் போகக் கூடாது என்பதே பாஜக திட்டம்.
ஆகவேதான் கோவையில் ரோடு ஷோ நடத்துகிறார். 1998இல் மிகப்பெரிய வகுப்புக் கலவரம் நடந்த பகுதி கோவை ஆர்.எஸ்.புரம். அங்கே சென்று இத்தனை ஆண்டுகள் கழித்து மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
இன்றைக்கு உள்ள தலைமுறைக்கு இந்தச் சம்பவம் என்னவென்றே தெரியாது. இன்று உள்ளவர்கள் அந்த வன்முறையைப் பற்றி அறியாதவர்கள். அவர்களுக்குத் தனது அஞ்சலி மூலம் மோடி என்ன சொல்ல வருகிறார்?
மறந்து போன ஒரு வகுப்புவாத கலவரத்தின் நினைவுகளையா? அதைத்தான் எதிர்க்கட்சிகள் விமர்சனமாக முன்வைக்கின்றன. தமிழ்நாட்டில் வேறு எந்தப் பகுதிக்கும் செல்லாமல் மூன்று முறை கொங்கு மண்டலத்தை மோடி சுற்றிச் சுற்றி வரவேண்டிய தேவை என்ன?
கொங்கு மண்டல மக்களின் சார்பாக மோடிக்கு 67 கிலோ மஞ்சள் மாலை போடுகிறார்கள். கொங்கு மக்கள் அதிகம் விரும்பு காளையைப் பரிசாகத் தருகிறார்கள். இவை எல்லாம் வெறும் பரிசுப் பொருட்களா? இல்லை.
பாஜக டார்கெட் செய்யும் கொங்கு மக்களின் அடையாளங்கள். அந்த அடையாளங்களைப் பறிப்பதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை இந்தக் கொங்குப் பகுதியிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது பாஜக என்றே தகவல்கள் சொல்கின்றன.












Click it and Unblock the Notifications