சேப்பாக்கம், ராஜபாளையத்தை பறிகொடுத்து கோவை தெற்கு, மதுரை வடக்கு தொகுதிகளை அதிமுகவிடம் வாங்கிய பாஜக
சென்னை: சேப்பாக்கம், ராஜபாளையம் தொகுதிகளை பறிகொடுத்து கோவை தெற்கு, மதுரை வடக்கு தொகுதிகளை அதிமுகவிடம் அடம்பிடித்து வாங்கியுள்ளது பாஜக.
பொதுவாக கட்சிகளின் தொகுதி பங்கீடுகள் முடிந்த பின்னர்தான் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் ஏதோ ஒரு நினைப்பில் தமிழக தேர்தலில் பாஜக தன்னிச்சையாகவே சில தொகுதிகளை கையில் எடுத்துக் கொண்டு வேட்பாளர்களையும் முகாமிட வைத்து பிரசாரமே செய்தனர்.

குஷ்பு, கவுதமி
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நடிகை குஷ்புதான் வேட்பாளர் என்றே பிரசாரம் செய்யப்பட்டது. தாம் சார்ந்த ராஜூ ஜாதியினர் கணிசமாக உள்ள ராஜபாளையம் தொகுதியில் வீடு எடுத்து தங்கி பிரசாரம் செய்தார் நடிகை கவுதமி.

கோவை தெற்கு வானதி சீனிவாசன்
இன்னொரு பக்கம் கோவை தெற்கு தொகுதியை எப்படியாவது வாங்க வேண்டும் என்பதற்காக டெல்லி முதல் கோவை வரையிலான அத்தனை செல்வாக்கையும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரான வானதி சீனிவாசன் பயன்படுத்தினார். ஆனால் கோவை தெற்கு தொகுதி சிட்டிங் அதிமுக எம்ம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூன் ஆதரவாளர்களோ கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டமே நடத்தினர்.

ராஜன் செல்லப்பா
அதேபோல் மதுரை வடக்கு தொகுதியை பெறுவதிலும் பாஜக படுதீவிரமாக இருந்தது. இது மதுரை மேயராக இருந்த ராஜன் செல்லப்பாவின் தொகுதி. அதிமுகவுக்கு கடுமையாக நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட நிலையில்தான் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.

அதிமுக தொகுதிகள் மாற்றம்
அதில் சேப்பாக்கமும் இல்லை ராஜபாளையமும் இல்லை. பாஜக அடம்பிடித்த கோவை தெற்கு, மதுரை வடக்கு தொகுதிகள் கிடைத்தன. இதனை சமாளிக்கும் வகையில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணனுக்கு கோவை வடக்கு தொகுதியும் ராஜன் செல்லப்பாவுக்கு திருப்பரங்குன்றமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நட்டாற்றில் நடிகைகள்
பாஜக தலைமையை பெரிதும் நம்பி பிரசாரம் செய்த நடிகைகள் குஷ்பும் கவுதமியும் நட்டாற்றில் விடப்பட்டனர். நீண்டகாலமாகவே சட்டசபை தேர்தல் வெற்றிக்காக காத்திருந்த வானதி சீனிவாசன் கமுக்கமாக காய்நகர்த்தி வென்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications