அனைத்து நாட்களும் கோயில்களை திறக்கக் கோரி... அக்.7-ம் தேதி பாஜக போராட்டம் -அண்ணாமலை
சென்னை: தமிழகத்தில் வெள்ளி, சனி உட்பட அனைத்து நாட்களும் கோயில்களை திறக்கக்கோரி அக்டோபர் 7-ம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத உணர்ச்சியற்ற அரசு தமிழகத்தில் உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
கோயிலை திறக்குமாறு அரசுக்கு விடுத்த வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிப்போனதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வஞ்சக எண்ணம்
கோயில்களுக்கு சென்று கடவுளை வழிபடுவது தமிழர்கள் வாழ்வியலின் ஒரு பகுதியாகும். இதை தடுக்க நினைப்பது தீய எண்ணத்தின் சதியாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், பேருந்துகள், அலுவலகங்கள், உணவகங்கள் என எல்லாம் சரளமாக நடைபெறும் போது தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் மட்டும் வார நாட்களில் மூடுவது வஞ்சக எண்ணமாகத் தான் இருக்குமே தவிர அதற்கு வேறு காரணம் இருக்காது.

தங்ககட்டி
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களை மூன்று நாட்கள் தடுத்து நான்காவது நாளான திங்கட்கிழமை அதிக கூட்டத்தை வேகமாக அனுமதிப்பதன் மூலம் நோய்த் தொற்றை தடுக்கிறோம் என திமுக அரசு கூறுவதை யாராலும் ஏற்க இயலாது. கோயில்களுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட ஆபரணங்களை உருக்கி அதை தங்க கட்டியாக்கி அதிலும் பணம் சம்பாதிக்க நினைக்கிறது திமுக அரசு.

ஒரு சார்பு
கோவிட் தொற்றுநோயே கோயில்களை திறக்காததற்கு காரணமாக சொல்வது நகைப்புக்குரியது. மாற்று மதங்களின் வழிபாட்டுத்தலங்கள் எல்லா நாட்களிலும் அரசின் மறைமுக ஆதரவுடன் இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றன என்பதை நிரூபிப்பதற்கு பல சான்றுகள் உள்ளன. திமுக அரசு தனது ஒரு சார்பு அரசியல் நிலைப்பாட்டையே அரசின் நிலைப்பாடாகவும் தொடர்வது தெளிவாகிறது.

அக்டோபர் 7
அனைத்து நாட்களிலும் ஆலயம் செல்ல அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக்டோபர் 7-ம் தேதி காலை 11 மணியளவில் முக்கிய கோயில்கள் முன்பாக பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார்கள்.இந்த போராட்டத்தை பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஒருங்கிணைக்கிறார். போராட்டத்தில் பாஜகவினர் பெருந்திரளாக கலந்துகொண்டு அரசை திகைக்க வைக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications