பங்குனி உத்திரம், வளர்பிறை.. கூட்டணியும் உறுதி, தமிழக பாஜக தலைவரும் தேர்வு! இதை கவனிச்சீங்களா!
சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணியை பாஜக இன்று உறுதி செய்திருக்கிறது. அதிமுக தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் என அமித்ஷா கூறியுள்ளார். அதே நேரம் இன்று தமிழக பாஜக தலைவர் தேர்வும் நடைபெற்றிருக்கிறது. இரண்டும் வளர்பிறை, நல்ல நேரத்தில் நடந்திருக்கிறது.
பங்குனி உத்திரம், வளர்பிறை நாளான இன்று நல்ல நேரம் பார்த்து புதிய தலைவரையும், கூட்டணியையும் பாஜக இறுதி செய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக ஏற்கனவே இருக்கும் கூட்டணியுடன் களமிறங்குகிறது. மறுபுறம் அதிமுக எந்த மாதிரியான கூட்டணியை உறுதி செய்யும்? பாஜகவுடன் சேருமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இப்படி இருக்கையில்தான் தற்போது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருக்கிறது என்றும், தமிழகத்தில் அதிமுக தலைமையில் நாங்கள் தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.
இந்த கூட்டணி இறுதி செய்யப்படுவதற்கு ஏதேனும் நிபந்தனைகளை அதிமுக முன்வைத்ததா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமித்ஷா, அப்படியான எந்த நிபந்தனைகளும் முன்வைக்கப்படவில்லை என்று கூறினார்.
மறுபுறம் இன்று பாஜகவின் தமிழ் மாநில தலைவர் தேர்வும் நடைபெற்றிருக்கிறது. இந்த தேர்தலை மாநில துணைத்தலைவரான சர்க்கரவர்த்தி நடத்தினார். இன்று மாலை 2-4 மணி வரை தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் பாஜகவின் தமிழக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவருக்கு அண்ணாமலை, வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, எல்.முருகன், பொன். ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் ஆதரவளித்துள்ளனர்.
வேட்புமனுவுக்கான நேரம் முடிவடைந்த பின்னரும் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மாலை வெளியாக இருக்கிறது. இருப்பினும் நாயினாரின் தேர்வு இன்றே நடந்திருக்கிறது.
புதிய தலைவர் தேர்வு, கூட்டணி உறுதி என இரண்டும் இன்றைய தினத்தில் நடந்ததற்கு முக்கிய காரணம் இருப்பதாக விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். பாஜக சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் அரசியல் கட்சி. அக்கட்சியின் பல முக்கிய நிகழ்வுகளுக்கு நல்ல நேரம் பார்ப்பது இயல்பானதுதான் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோலத்ததான் இன்று நடந்த நிகழ்வும், பங்குனி உத்திரம், வளர்பிறை நாளான இன்று நல்ல நேரம் பார்த்து புதிய தலைவரையும், கூட்டணியையும் பாஜக இறுதி செய்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.
குறிப்பாக இன்று மாலை 4.30-5.30 நல்ல நேரம். இந்த நேரத்தில்தான் கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications