“தமிழக மக்கள் மட்டுமல்ல.. முருகரும் மயங்க மாட்டார்!” பாஜகவை சாடிய திருமாவளவன்
சென்னை: மதுரையில் 'முருகர் மாநாடு' நடத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. ஏற்கெனவே திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், இந்த மாநாடு குறித்து பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "மாநாட்டு நடத்துவதால் பாஜகவின் மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் மட்டுமல்லாது, முருகரும் மயங்க மாட்டார்" என்று பாஜகவை விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது, "மாநிலத்திற்கு மாநிலம், பாஜக மதவாத அரசியலின் வடிவத்தை மாற்றி கையில் எடுக்கும். வட இந்தியாவுக்கு போனால் விநாயகர், ராமர், அரசியலை எடுக்கிற பாஜக, மேற்கு வங்கத்திற்கு போனால், துர்கா, காளி என்று வேறு வடிவத்தை எடுக்கும். தமிழ்நாட்டுக்கு வந்தால் முருகனை கையில் எடுக்கிறார்கள். இது அவர்களின் அரசியல் யுக்திகளில் ஒன்று.

பிற மாநிலங்களில் இந்த மதவாத அரசியலுக்கு மக்கள் மயங்குவது போல, தமிழ்நாட்டில், இவர்களின் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் மக்கள் மயங்கமாட்டார்கள். முருகனும் மயங்கமாட்டார். தமிழ்நாட்டு மதவாதத்திற்கு மயங்காது என்பதை மக்கள் வரவிருக்கிற 2026 தேர்தலில் உறுதிப்படுத்துவார்கள். ஆகவே அவர்கள் என்ன மாநாடுகளை போட்டாலும் அது தமிழ்நாட்டில் எடுபடாது" என்று பதிலளித்துள்ளார்.
அதேபோல, மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று இப்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அவர்கள் ஆட்சியில் இருக்கும் போதே அதை செய்து முடிக்க வேண்டும், என்கிற முனைப்பில் இதை முன்னெடுத்திருக்கிறார்கள். அதை வரவேற்கிறோம். 2021ல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தள்ளிப்போனது.
2031ல் தான் கணக்கெடுப்பை நடத்துவார்கள் என்கிற ஒரு நிலையில் இருந்தது. நல்ல வேலையாக இவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே 27லேயே கணக்கெடுப்பை தொடங்குகிறார்கள். 2029 நாடாளுமன்ற பொது தேர்தலை கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கையை அவர்கள் முன்னெடுக்கிறார்கள் என்று நம்புகிறோம்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துகிற போது, சாதிவாதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதையும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள் அதையும் வரவேற்கிறோம். இதற்குப் பிறகு, நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை அமைப்பதற்கான குழு அமைக்கப்படும். அதில் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்கிற ஒரு கருத்து வலுவாக உள்ளது. இது குறித்து நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினார். மத்திய அரசுக்கும் தென்னிந்திய மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
முதல்வரின் இந்த கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. ஏற்கனவே அதை நாங்கள் சுட்டிக் காட்டி இருக்கிறோம். ஆகவே அதற்கு தனியே ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அந்த வரையறைகளை எவ்வாறு செய்வது என்பது குறித்த வரையறைகளை முடிவு செய்ய வேண்டும். மாநில அரசுகளை கலந்து பேசாமல், நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுவரையறை குறித்து மத்திய அரசு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்பது தான் முதல்வரின் கருத்தும் விடுதலை சிறுத்தைகளின் கருத்தும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications