தாங்கி பிடிக்கும் பாஜகவுக்கே இந்த சோகம்னா.. அதிமுக அரசுக்கு எப்படி இருக்கும்!
பாஜக 5 மாநில தோல்வி.. தமிழக அரசை பாதிக்குமா? என தெரியவில்லை.
சென்னை: பாஜக எவ்வளவு சோகத்தில் இருக்கிறதோ தெரியாது. ஆனால் அதிமுக தரப்பில் நிச்சயம் உள்ளூர ஒரு கிலி உண்டாகியிருக்கும்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசு பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டது என்பது ஒட்டுமொத்த கட்சிகள், மக்களின் கருத்து.
அதை அதிமுக வலிமையாக மறுத்ததே இல்லை. பல அமைச்சர்கள் பாஜகவுக்கு ஆதரவாக பகிரங்கமாக பேசியும் வருகின்றனர்.
தலையில் குட்டு
அப்படி தங்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ள பாஜகவே ஆட்டம் கண்டிருப்பதுதான் அதிமுக தரப்பையும் சேர்த்து அதிர வைத்துள்ளது. ஜெயலலிதா மறைந்ததில் இருந்தே கைதூக்கி அரவணைத்தும், அவ்வப்போது தலையில் குட்டியும் வைத்து கொண்டிருப்பது மத்திய பாஜகதான்.
என்ன உணர்வோ?
ஆனால் நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று அதிமுக எதிர்பார்க்கவில்லை. அந்த பக்கம் சந்திரபாபு நாயுடு சிரித்து மகிழ்கிறார். இந்த பக்கம் பினராயி விஜயன் பூரிப்பில் உள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ என்ன மாதிரியான உணர்வில் இருக்கிறார் என்று தெரியவில்லை.
குடுமிப் பிடி
இதில் 2 விஷயங்கள் உள்ளன. ஒன்று, எப்போதோ கவிழக்கூடிய ஒரு ஆட்சியை இன்றைக்கும் வரைக்கும் இழுத்து கொண்டு போய் கொண்டிருப்பது மத்திய பாஜகதான். ஆனால் இதெல்லாம் ஒன்றும் லாப நோக்கம் இல்லாமல் மோடி செய்யவில்லை. தமிழகத்தின் இயற்கை வளங்களுக்கு வழிவிடப்பட்டுள்ளது. மற்றொரு புறம் ஊழல் புகார் அமைச்சர்களின் குடுமிப்பிடியும் மோடியிடம் உள்ளது.
வலுவான காங்கிரஸ்
இன்னொரு காரணம், ஒரு மாநிலம், 2 மாநிலம் என்றால் பரவாயில்லை. ஒரேயடியாக 5 மாநிலங்களிலும் பாஜக இப்படி குப்புற விழுந்துவிட்டதால், காங்கிரசின் பலம் கூடியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ்-திமுக கூட்டணி பலமாக உள்ளது, வலுவாக உள்ளது என்று டெல்லி முதல் தமிழகம் வரை எல்லோரும் சொல்லி விட்டார்கள்.
ஸ்டாலின் ஆட்சி?
போதாக்குறைக்கு ஸ்டாலின் ஒரு பக்கம் சந்திரபாபு நாயுடு, ராகுலை சந்தித்து கலக்கி வருகிறார். வரப்போகும் தேர்தலிலும் காங்கிரசுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு வந்தால் என்னாகும்? மத்தியிலும் ராகுலும், மாநிலத்தில் ஸ்டாலினும் வந்துவிட நிறைய வாய்ப்புள்ளது. எனவே இந்த 5 மாநில தேர்தல் பாஜகவுக்கு எவ்வளவு அடியை, வலியை, இழப்பை தருகிறதோ அதே அளவுக்குத்தான் அதிமுக அரசுக்கும் தந்துள்ளது.