பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்.. பள்ளியில் அமைச்சர் காந்தி பேச்சு.. பாய்ந்து வந்தது பாஜக!
சென்னை: அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை விதைக்கும் வகையில் பேசிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பாவம் செய்தவர்களுக்குத்தான் ஆண் குழந்தை பிறக்கும் எனப் பேசிய அமைச்சர் காந்தி கைது செய்யப்படுவாரா என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, அரசுப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அரக்கோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கிய அமைச்சர் ஆர். காந்தி மேடையில் உரையாற்றினார்.

அப்போது, மாணவிகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களுக்கு மகன்களாகவே பிறக்கும் என்றும், புண்ணியம் செய்தவர்களுக்கே மகள்கள் பிறக்கும் என்றும் பேசியுள்ளார் கைத்தறித்துறை அமைச்சர் ஆர் காந்தி. அவரது இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை தனது எக்ஸ் சமூக தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "முற்பிறவியில் பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்கிறார் அமைச்சர் காந்தி அவர்கள். ஆண்களாய் பிறப்பது பாவமா? இது மூட நம்பிக்கை பேச்சு இல்லையா? அரசு பள்ளியில் இப்படி பேசியதால் தானே மகா விஷ்ணுவை கைது செய்து நடவடிக்கை எடுத்தீர்கள். உங்கள் ஏரியாவில் வந்து இப்படி பேசிவிட்டு சென்றிருக்கிற இந்த அமைச்சரை சும்மா விடுவீர்களா? கைது செய்ய வேண்டும் என வற்புறுத்த மாட்டீர்களா அன்பில் மகேஷ் அவர்களே?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளில் சொற்பொழிவாற்றிய பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்ற இளைஞர், அசோக் நகர் பள்ளியில் மாணவ மாணவிகள் மத்தியில் பேசியபோது, மாற்றுத்திறனாளிகள் பற்றி பாவம், புண்ணியம் ஆகியவற்றோடு தொடர்புபடுத்திப் பேசினார்.
மகாவிஷ்ணு, அரசுப் பள்ளிகளி மாணவர்கள் மத்தியில் ஆன்மீகம் என்ற பெயரில் மூடநம்பிக்கை கருத்துகளைப் பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மகாவிஷ்ணு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. மேலும், அரசுப் பள்ளியில் அந்த நபரை அனுமதித்தது யார் என்றும் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அசோக் நகர் அரசுப் பள்ளிக்கே சென்ற, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, என் ஏரியாவுக்கே வந்து எனது துறை ஆசிரியரை அவமரியாதை செய்தவரை சும்மா விடமாட்டேன் என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பிய மகாவிஷ்ணு, சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசு பள்ளியில் பாவம், புண்ணியம் பற்றி பேசியதால் மகா விஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில் அதேபோல, அமைச்சர் ஆர். காந்தியும் பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications