அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை.. பாஜகவினர் ஆர்ப்பாட்டம்! எஃப்ஐஆர் கசிவு குறித்து அண்ணாமலை ஆவேசம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே அங்குப் படித்த மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு கட்டிடத்தின் பின்புறம் கடந்த 23ஆம் தேதி பெண் ஒருவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை:
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இருவரும் ஒன்றாக இருப்பதைப் போட்டோ, வீடியோ எடுத்துள்ளார். மேலும், அதைப் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டி, அந்த பெண்ணை வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அந்த மாணவி போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவினர் கைது:
இதைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையே இந்தச் சம்பவத்திற்கு எதிராக பாஜக சார்பிலும் போராட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்திலேயே இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் திமுக நிர்வாகி என்று குற்றஞ்சாட்டியும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணாமலை கண்டனம்:
ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட நபர் திமுக நிர்வாகி என்று குற்றஞ்சாட்டியுள்ள அண்ணாமலை, இதன் காரணமாகவே எஃப்.ஐ.ஆர் தகவல்கள் கசியவிடப்பட்டு இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில், "சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன்:
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழு பொறுப்பு.
திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications