வாரந்தோறும் செவ்வாய்கிழமை கமலாலயத்தில் 'இது' நடக்கும்.. தமிழிசை அதிரடி அறிவிப்பு
சென்னை : பாஜக தலைமைஅலுவலகமான சென்னை தியாகராய நகர் கமலாலயத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்கு பல்வேறு அதிரடியான செயல் திட்டங்களை பாஜக வகுத்துள்ளது. அதன்படியே அண்மையில் ஊடக விவாதங்களில் மீண்டும் கலந்து கொள்ளும் முடிவினை பாஜக தலைமை எடுத்துள்ளது.
இந்த முடிவினை எடுக்கும் முன்பு ஊடகத்தினரை பாஜக குழு சந்தித்துள்ளது. அந்த குழுவினரிடம் தமிழக ஊடகத் தலைமைகள் இனி சம வாய்ப்பு உறுதியாக அளிக்கப்படும் என உறுதி அளித்ததாம். இதையடுத்தே தமிழக பாஜகவினர் ஊடக விவாதங்களில் பங்கேற்பது என்ற முடிவுக்கு வந்தாராம்.
ஊடக விவாதம்
ஊடக விவாதங்களில் பங்கேற்று பாஜகவுக்கு எதிரான பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு 27 பேரை தமிழிசை அறிவித்துள்ளார். இந்த குழுவில் வலுவான பல தலைவர்கள் உள்ளதால் பலன் அளிக்கும் என நம்புகிறார்.
மனுக்களை பெற்ற தமிழிசை
இனி ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என தமிழிசை சௌந்திரராஜன் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாயத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்களை தமிழிசை பெற்றார். இந்த ,மனுக்கள் மீதான குறைகள் பரிசீலனை செய்யப்பட்டு தீர்க்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவை வளர்க்க முடிவு
பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்ப்பதன் மூலம் தமிழகத்தில் பாஜக மீது மக்களிடையே நல்ல அபிப்ராயத்தை உருவாக்க முடியும் என்றதால் இந்த திட்டத்தை தமிழிசை சௌந்திரராஜன் கையில் எடுத்துள்ளார்.
|
உள்ளாட்சி தேர்தலை நோக்கி
இதேபோல் பல்வேறு அதிரடியான அரசியல் நகர்வுகள் இனிவரும் நாட்களில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதம், கருத்துக்களை உருவாக்கி பாஜக தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் அக்டோபரில் நடைபெற உள்ள நிலையில் இதற்கான திட்டமிடல்களாக பாஜகவின்அரசியல் நகர்வுகள் பார்க்கப்படுகிறது.