தமிழ்நாட்டை இரண்டாக இரண்டாக பிரிக்கும் பேச்சுக்கள் - ஓ இதான் காரணமா! அப்போ கொங்குநாடு?
சென்னை: தமிழ்நாட்டை 2 ஆக பிரித்து பல்லவ நாடு, பாண்டிய நாடு என்று பெயரிட வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ள நிலையில் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அலசுவோம்.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலம் பெகலாவியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில அமைச்சர் உமேஷ் கட்டி, இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட உள்ளது என்று கூறினார்.
மகாராஷ்டிரா 3 மாநிலங்களாகவும், கர்நாடகா 2 மாநிலங்களாகவும், உத்தரப்பிரதேசம் 4 மாநிலங்களாகவும் பிரிக்கப்படுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நயினார் நாகேந்திரன் பேச்சு
இந்த நிலையில் இன்று நெல்லையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக எம்.பி. ஆ.ராசா, தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் தமிழ்நாட்டை ஆந்திரா போல் 2 ஆக பிரிக்க வேண்டும் எனக் கேட்போம். பல்லவ நாடு, பாண்டிய நாடு என்று பிரித்தால் பாஜகவை சேர்ந்தவர் முதலமைச்சராக வர முடியும். பிரதமர் மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை எங்களால் பிரிக்க முடியும்." என்று எச்சரித்தார்.

ராமதாஸ் கோரிக்கை
இந்த கோரிக்கையை பாமக உள்ளிட்ட கட்சிகள் பல ஆண்டுகளாகவே எழுப்பி வருகின்றன. குறிப்பாக பாமக தலைவர் ராமதாஸ் தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆண்டும் முன்வைத்திருந்தார். சென்னை, கோவைக்கு இணையாக மதுரையில் தொழிற்சாலைகள் இல்லாததால் மாவட்டங்களை மூன்றாக பிரிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார்.

தென் தமிழ்நாடு கோரிக்கை
குறிப்பாக 70 களின் பிற்பகுதியிலேயே வட தமிழ்நாடு கோரிக்கை எழுப்பப்பட்டது. எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார், 1976 ஆம் ஆண்டிலேயே திட்டக்குடியில் ஒரு மாநாட்டை நடத்தி வன்னியர் மாநிலம், அல்லது வட தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலத்தை அமைக்க வேண்டும் என்று கோரினார். இதேபோல் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த சேதுராமன் மதுரையை தலைமையிடமாக கொண்டு தென் தமிழ்நாடு என்ற தனி மாநில கோரிக்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்தார்.

கண்டுகொள்ளாத திராவிட கட்சிகள்
எல்.முருகன் அமைச்சராக பொறுப்பேற்றபோது தமிழ்நாடு என்று குறிப்பிடாமல் கொங்குநாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சைக்கு உள்ளானது. தமிழ் நாளிதழ் ஒன்றில் கொங்கு நாடு தனி யூனியன் பிரதேசமாகிறது என்ற செய்தியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவினரும் கொங்குநாடு பிரிவினையை ஆதரித்து கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், தமிழ்நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் திராவிடக் கட்சிகள் இதனை கண்டுகொள்ளவே இல்லை.

சாதி அடிப்படையில் பிரிக்கும் முயற்சியா?
மாநில மறுசீரமைப்பு என்பது மொழி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு தற்போதைய தமிழ்நாடு உருவானது. ஆனால், அதை மூன்றாக பிரிக்க சொல்வது பகுதி அடிப்படையில் என்று நினைப்பதை விட சாதி அடிப்படையில் பிரிக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்கு காரணம் தமிழ்நாடு மூன்று மாநில கோரிக்கைகளை முன்வைக்கும் கட்சிகள், அமைப்புகள் யாவும் குறிப்பிட்ட பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் சாதிகளை பின்புலமாக கொண்டவை.

தமிழ்நாடு என்னும் சமத்துவ பூமி
வட மாநிலங்களில் சாதி, மத அடிப்படையில் மக்களின் வாக்குகளை திரட்டி தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கின்றன. ஆனால், சமத்துவ பூமியான தமிழ்நாட்டில் சாதி, மத வேறுபாடுகளை ஆதரிக்கும் சக்திகள் இதுவரை ஆட்சியை கைப்பற்றியது கிடையாது. சமூக நீதியை கொள்கையாக கொண்ட பெரியார், அண்ணா வழிவந்த திமுகவும் அதிமுகவுமே மாறி மாறி ஆட்சியில் இருந்துள்ளனர்.

சாதி ஒடுக்குமுறைகள் அதிகரிக்கும் அபாயம்
எனவே 3 மாநிலங்களாக பிரித்துவிட்டால், அந்தந்த மண்டலங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் சாதிகளை அடிப்படையாக கொண்ட கட்சிகள் அரசியலில் ஆதாயம் அடையலாம் என்று நினைப்பதாகவே தெரிகிறது. இதன் மூலம், அந்தந்த பகுதிகளில் சிறுபான்மை சமூகமாக வசித்து வருபவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் அரசியல் பலம் இழந்து அவர்கள் மீதான சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் அதிகரிக்க காரணமாகிவிடும் என்ற அச்சம் எழாமல் இல்லை. எனவே சாதி, மத ரீதியில் பிரிந்துவிடாமல் தமிழர்களாக, மனிதர்களாக ஒன்றிணைந்து சதிகளை முறியடித்து சரித்திரம் படைப்போம்.












Click it and Unblock the Notifications