பழனி சட்டசபை தொகுதி.. பாஜகவின் இடைவிடாத முற்றுகை.. திமுகவுக்கு நெருக்கடியா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வெல்ல வேண்டும் என இலக்கு வைத்திருக்கக் கூடிய தொகுதிகளில் பழனியும் ஒன்று.. இம்முறை பழனி தொகுதியில் அதிமுக-பாஜக கைகோர்க்கும் நிலையில் திமுகவுக்கு சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
பழனி சட்டசபை தொகுதியைப் பொறுத்தவரையில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் மாறி மாறி வென்று வந்திருக்கின்றன. இரு கட்சிகளுக்குமே கணிசமான வாக்கு வங்கி எப்போதுமே உள்ளது.
பழனியில் பாஜக?
இந்த முறை அதிமுக கூட்டணியில் பழனி தொகுதியை பாஜக கேட்டுப் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிற கருத்து உள்ளது. இதனாலேயே பழனியை முன்வைத்து பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளை இடைவிடாமல் நடத்தி வருகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு பழனியில் பாஜக மாநில தலைவர் எல். முருகன், மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் காவடி எடுத்து வழிபாடு நடத்தி இருந்தனர்.
திமுக ஐபி செந்தில்குமார்
பழனியில் கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவின் ஐபி செந்தில்குமார் வெற்றி பெற்றார். இதே தொகுதியில் 2011 தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் ஐபி செந்தில் தோற்றார். 2016 சட்டசபை தேர்தலில் ஐபி செந்தில்குமார் சுமார் 50% வாக்குகளைப் பெற்றிருந்தார். அதிமுகவின் குமாரசாமி சுமார் 38% வாக்குகளைப் பெற்றார். கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் 2% வாக்குகளை பெற்றிருந்தார்.
பாஜக முகாம்
இந்த தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளன. இந்த 5 ஆண்டுகாலங்களில் பாஜகவின் ஒவ்வொரு பழனி நிகழ்ச்சிக்கும் கூடும் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்பது களத்தில் இருந்து பார்ப்பவர்களின் கருத்து. இந்த கூட்டம் அப்படியே வாக்குகளாக மாறினால் பாஜகவின் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கான வெற்றியாகவே பார்க்கப்படும். இந்த தொகுதியில் பாஜகவுக்கு கூடுகிற கூட்டம்தான் இப்போதும் பேசுபொருளாக இருக்கிறது.
தொகுதி மாறும் ஐபிஎஸ்?
மேலும் இம்முறை திமுகவின் ஐபி செந்தில்குமார், பழனி தொகுதியில் மீண்டும் போட்டியிட மாட்டார் என்கிற கருத்தும் உள்ளது. அதிமுக- பாஜகவுடன் மல்லுக்கட்டுவதை விட திண்டுக்கல் அல்லது தந்தையின் ஆத்தூர் தொகுதியை ஐபி செந்தில்குமார் தேர்வு செய்யலாம் என்கிற தகவலும் வலம் வருகிறது. பாஜகவின் இடைவிடாத இந்த முற்றுகைக்கு பலன் கிடைக்குமா? என்பதை தேர்தல் முடிவுகள் சொல்ல காத்திருக்கின்றன.