Exclusive ஓபிஎஸ் ஜீரோ.. அப்பாயின்மென்ட் கொடுத்துட்டு அனுப்பிட்டாங்க.. போட்டு உடைக்கும் ஸ்ரீநிவாஸ்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தலைவர்களிடையே செல்வாக்கு இல்லை, அவர்களைப் பொறுத்தவரை ஓபிஎஸ் வெறும் 'மண் குதிரை' தான் என பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ், ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கடந்த 5 மாதங்களாக நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், இருவருமே டெல்லி பாஜக தலைமையின் ஆதரவைப் பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். எனினும், பாஜக தலைமை இருவருக்குமே இன்னும் பிடி கொடுக்கவில்லை.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், பாஜக தலைமை தங்களையே ஆதரித்து வருவதாகக் கூறி வருகின்றனர். பாஜகவின் விருப்பம் இருவரும் சேரவேண்டும் என்பதால், எடப்பாடி பழனிசாமி தனித்துச் செயல்பட விரும்புவதை பாஜக தலைமை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக மேலிட வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ், அதிமுக விவகாரம் குறித்து ஒன் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் இங்கே:
#Exclusive கிரவுண்டை ரெடி பண்றாங்க.. அண்ணாமலை கையில் சிக்கிடுச்சு.. கோலாகல ஸ்ரீநிவாஸ் 'பரபர'!
சமமான தொலைவில்
"அதிமுகவில் ஏற்கனவே அடித்துக்கொண்டு, சேர்ந்துகொண்டவர்கள் என்பதால், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை அதிமுக உள்விவகாரத்தில் பாஜக தலையிட விரும்பவில்லை. தற்போதைய சூழலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் சமமான தொலைவிலேயே வைத்துப் பார்க்கிறது பாஜக. அதிமுகவைப் பொறுத்தவரை ஓபிஎஸ்ஸுக்கு செல்வாக்கு இல்லை. 90 சதவீதம் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருக்கிறது. சொந்த சமூக, சொந்த மாவட்டத்திலேயே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு இல்லை. தேனி எனும் சுண்டைக்காய் மாவட்டத்தில் மட்டுமே தேனிக்கு செல்வாக்கு. அங்கு உள்ள 4 தொகுதிகளிலும் 3ல் திமுக வெற்றி பெற்றது.
தோற்கடித்தார்
அதேசமயம், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 10ல் அதிமுகவை ஜெயிக்க வைத்திருக்கிறார் எடப்பாடி. அதிமுக ஜெயித்துவிட்டால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆகிவிடுவார் என்று, தேர்தல் பிரச்சாரத்தை கூட தாமதமாகவே ஆரம்பித்தார் ஓபிஎஸ். அதிமுக தோற்பதற்கான எல்லா வேலையும் செய்துவிட்டு, இன்று அதிமுகவின் தலைமைப் பதவிக்கு வரவேண்டும் என்றால் எப்படி? தன் மகனை தவிர தன்னை நம்பி வந்தவர்கள் யாருக்கும் எதுவும் செய்யவில்லை.
டெல்லியில் செல்வாக்கு இல்லை
ஓ.பன்னீர்செல்வம் தனக்கு டெல்லியில் பெரிய செல்வாக்கு இருப்பதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். பாஜகவைப் பொறுத்தவரை அதிமுகவோடு தான் கூட்டணி, இவர்கள் இருவரில் யார் என்பதையெல்லாம் கோர்ட் பார்த்துக்கொள்ளும் என்ற முடிவில் தான் இருக்கிறது. பாஜக தலைமை ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதெல்லாம் முழுப் பொய். அதற்கு உதாரணம், ஓபிஎஸ் துணை முதல்வராக இருந்தபோது டெல்லி சென்றார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரம் கேட்டு அனுமதி அளித்த பிறகு, சந்திக்கச் சென்றவர்களை சந்திக்க முடியாது என திருப்பி அனுப்பினார் நிர்மலா சீதாராமன். டெல்லியில் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு இவ்வளவுதான்.
மோடிக்கு தெரியாதா?
மத்திய உள்துறை அமித்ஷா சமீபத்தில் சென்னை வந்தபோது, திமுகவிற்கு எதிராக நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என பாஜகவினரிடம் பேசுகிறார். ஆனால், ஓபிஎஸ் மகன் ஸ்டாலினை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் மோடிக்கு தெரியாதா? முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸை பார்த்து, நீங்க துணை முதல்வரா இருங்க என்று பிரதமர் மோடி சொன்னார் என்றால் அவரது மதிப்பு தளர்ந்ததைத்தானே காட்டுகிறது. ஆனால் அதையே ஏதோ மரியாதை போல பொதுவெளிகளில் பேசி வருகிறார் ஓபிஎஸ்.
மண் குதிரை
பிரதமர் மோடி சென்னை வந்தபோது, எடப்பாடி பழனிசாமி வரவேற்கச் சென்றார். ஓபிஎஸ் வழியனுப்பச் சென்றார். பாஜகவின் முக்கியமான மேலிட தலைவர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது அவர் சொன்னார், எடப்பாடியை வரவேற்கிறோம், ஓபிஎஸ்ஸை வழியனுப்புகிறோம். இன்னொரு வார்த்தையையும் ஓபிஎஸ் பற்றி இந்தியில் அவர் குறிப்பிட்டார். அந்த வார்த்தைக்கு அர்த்தம் மண் குதிரை. ஓபிஎஸ் 'மண் குதிரை' என்பதே பாஜக தலைமையின் அபிப்ராயமாக இருக்கிறது.
அப்பவே முடிஞ்சுது
ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் ஆரம்பித்தபோது, அவருக்கு பெரிய ஆதரவு இருப்பதாக எண்ணி பாஜக தலைமையும் அவரை ஆதரித்தது. அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு எம்.பி, ஓபிஎஸ்ஸை பற்றி டெல்லியில் வியந்து ஓதினார். ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்ததை அறிந்து பாஜக எண்ணத்தை மாற்றிக் கொண்டது. ஆனாலும், ஓபிஎஸ்ஸை பாஜக உடன் வைத்துக் கொண்டதற்குக் காரணம், நமது குட்புக்கில் இருக்கும் ஒருவர் அதிமுகவுக்குள் இருந்தால் நல்லது என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான்.
எடப்பாடி பலம்
சென்னையில் நடந்த தனியார் நிகழ்விற்கு எல்லோரையும் போல ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே அவரும் போய் முன்வரிசையில் அமர்ந்துவிட்டார். அமித்ஷா மேடையில் இருந்து வரும்போது ஓபிஎஸ்ஸை பார்த்து கைகுலுக்கினார். பாஜகவுடன் நெருக்கமாக இருப்பது போல காட்டிக்கொள்வதற்காக அங்கு சென்றார் ஓபிஎஸ். பாஜக தலைவர்களைப் போய் பார்க்க வேண்டிய அவசியம் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கிறது. ஆனால், அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்பதால் பாஜக தலைவர்களை போய் போய் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் தான் எடப்பாடி பழனிசாமி, அவர்கள் வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டியதில்லை எனப் பேசினார்." எனத் தெரிவித்துள்ளார்.