பி.டி.அரசகுமார் பேச்சு... கொந்தளிப்பில் பாஜக.. நடவடிக்கை எடுக்க நிர்வாகிகள் கோரிக்கை
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் மீது ஒருங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அவரது கட்சியிலேயே எழுந்துளது.
பி.டி.அரசகுமாரின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றும், அதனை பாஜக காரன் ஏற்றுக்கொள்ள மாட்டான் எனவும் அக்கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
இதனால் கட்சி மேலிடம் பி.டி.அரசகுமார் மீது நிச்சயம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடும் எனத் தெரிகிறது.

பாஜக எதிர்ப்பு
திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசுவின் மகள் திருமணம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், ஒரே போடாக எம்.ஜி.ஆருக்கு பிறகு தாம் ரசித்த ஒரே தலைவர் ஸ்டாலின் எனக் கூறினார். இது மோடியை அவமதிக்கும் வகையில் இருந்ததால் தமிழக பாஜக கொந்தளிப்பில் உள்ளது.

கண்டனம்
இந்நிலையில் பி.டி.அரசகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், அரசகுமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசியத் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசகுமாரின் பழைய திமுக விசுவாசம் இன்னும் போகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆவேசம்
இந்துத்துவா மீது சகதி வாரி வீசும் திமுகவுக்கு சந்தன அபிஷேகம் செய்வதா எனக் கேள்வி எழுப்பியுள்ள எஸ்.ஆர்.சேகர், அரசகுமாரின் பேச்சை எந்தவொரு பாஜக தொண்டனும் ஏற்கமாட்டான் என ஆவேசம் காட்டியுள்ளார். மேலும், காலம் தாழ்த்தாமல் அரசகுமாரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

நடவடிக்கை
பி.டி.அரசகுமாரின் பேச்சு தமிழக பாஜக தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் முதல் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மூத்த முக்கிய நிர்வாகிகள் சீரியஸாக விவாதித்துள்ளனர். இதனால் அரசகுமார் மீது நிச்சயம் நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications