ஆ.ராசா பேச்சு திரிக்கப்படுகிறது.. பாஜக வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது.. கி.வீரமணி தடாலடி!
சென்னை: திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சை திரித்து வெளியிடும் பாஜகவின் வித்தைகள், பெரியார் எண்ணில் எடுபடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின்னர், பாஜக - திமுக இடையே கருத்து மோதல் அதிகரித்துள்ளது. திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று பாஜக தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் திமுக எம்பி ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது ஆ.ராசா பேசுகையில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான், நீ பஞ்சமன்தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டதகாதவன் தான். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக கண்டனம்
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்துக்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அவதூறாக பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினரும் ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கி.வீரமணி அறிக்கை
இது ஒருபக்கம் இருக்க, ஆ.ராசா எவ்விதத்துலும் தவறாக பேசவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். இந்த நிலையில் பாஜக - ஆர்எஸ்எஸ்-ன் திரிப்பு பிரச்சாரங்கள் பெரியார் மண்ணில் எடுபடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்ப்பு பிரச்சாரம்
அந்த அறிக்கையில், சென்னை பெரியார் திடலில் கடந்த 6ம் தேதி அன்று 'விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆ.ராசா எம்பி உரையை திரித்து, வெட்டி, பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் அவர்களது அடிவருடிகளின் கூட்டணி, எதிர்ப்பு பிரசாரம் என்ற போர்வையில் திமுகவுக்கு எதிராகத் திட்டமிட்ட பிரசாரத்தை சமூக வலைதளங்களிலும், பத்திரிகைகளும் தொடர்ந்து எழுதியும், பேசியும், நடத்தியும் வருகின்றன. மனுதர்மத்தில் உள்ள சூத்திர, பஞ்சமன் என்ற அர்த்த விளக்கம் எவ்வளவு மானக் கேடானது. பெரும்பான்மையான உழைக்கும் நமது இனமக்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் சொல் என்பதைத்தான் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.

பெரியார் மண்
இதற்காக வழக்குப் போட்டு அவரை நீதிமன்றத்துக்கு அழைத்தாலும், அதை எதிர்கொண்டு மனுதர்மம், கீதை போன்ற சாதியை வலியுறுத்தும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் பல இந்து மத சாஸ்திரங்கள், தர்ம விளக்கம் பற்றி நீதிமன்றத்திலேயே அலசி சுட்டிக்காட்ட அவரும் தயார். அவர் சார்பில் பெரியார் தொண்டர்களாகிய நாமும் தயார். கருத்தை கருத்தால் சந்திக்கத் திராணி இல்லாத தில்லுமுல்லு திருகுதாளப் பேர்வழிகளே, உங்கள் வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications