பாஜகவுக்கு ஹாட்ரிக் வெற்றி உறுதி! தமிழகத்தை தாண்டி திமுகவால் போட்டியிட முடியுமா? வானதி ‛அட்டாக்’
சென்னை: தமிழகத்தை தாண்டி தேர்தலில் போட்டியிடவே முடியாத நிலையில் வார்த்தை ஜால அரசியல், வெற்றுக்கூச்சல் போடும் திமுகவை பார்த்து இமயம் முதல் குமரி வரை வெற்றிகளை குவித்து வரும் உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜக ஏன் பயப்பட வேண்டும். மாறாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. ஆனால் பாஜகவை இந்த தேர்தலில் வீழ்த்தி விட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

இதற்காக கடந்த மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை பாஜக எம்எல்ஏவும், பாஜகவின் மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் திமுக மீதும் அவர் கோபத்தை காட்டியுள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் இன்று காட்டமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் பேட்டி: அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவதில் திமுக முனைப்பாக இருக்கிறது. அகில இந்திய தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் என்னை சந்தித்து வருகின்றனர். அவர்களிடம் பாஜகவுக்கு எதிராக ஒரே அணி அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இதனால்தான் திமுக அமைச்சர்களை குறி வைக்கிறார்கள் என, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

வெற்றுக்கூச்சல்: திமுக என்ற அரசியல் கட்சி தொடங்கிய காலம் முதலே, எங்களைப் பார்த்து இந்தியாவே மிரள்கிறது, நேருவின் தூக்கத்தையே கெடுத்து விட்டோம் என்று வெறும் வார்த்தை ஜால அரசியலைத்தான் செய்து வருகிறது. பொய்யும், புரட்டும் நொடிக்கு நொடி அம்பலத்திற்கு வந்து விடும் இந்த தொழில்நுட்ப யுகத்திலும், இந்த வெற்றுக் கூச்சல் அரசியலை திமுக கைவிடவில்லை என்பதையும் ஸ்டாலினின் பேட்டி உணர்த்துகிறது.
தமிழகத்தை தாண்டி: தமிழகத்தை தாண்டி தேர்தலில் போட்டியிடவே முடியாத திமுகவை பார்த்து இமயம் முதல் குமரி வரை வெற்றிகளை குவித்து வரும் பாஜக ஏன் பயப்பட வேண்டும்? புதுச்சேரி உள்பட 40 தொகுதிகள் இருந்தாலும் திமுகவால் அதிகபட்சம் 25 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடவே முடியாது. இப்படிப்பட்ட கட்சியைப் பார்த்து ஒவ்வொரு தேர்தலிலும் 450 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிடும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே பெரிய அரசியல் கட்சியான பாஜகவுக்கு என்ன பயம் இருக்கப் போகிறது?.
நஷ்டம் இல்லை: பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் ஏற்கனவே பாஜகவை எதிர்க்கும் கட்சிகள்தான். எனவே, அவர்கள் கூடிப் பேசியதால் பாஜகவுக்கு எந்த நஷ்டமும் ஏற்படப்போவது இல்லை. பீகாரில் திமுகவோ, தமிழ்நாட்டில் ராஷ்ட்டீரிய ஜனதாதளமோ போட்டியிட முடியாது. பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளத்தில் கூட்டணி வைக்க முடியுமா? பாட்னா கூட்டத்தில் தென்னிந்தியாவில் இருந்து திமுக மட்டுமே கலந்து கொண்டுள்ளது.
பிளவுப்படும் கட்சிகள்: 80 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் இருந்து சமாஜ்வாடி மட்டுமே கலந்து கொண்டுள்ளது. காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் பிளவுபட்டதுடன், இந்துத்துவ வாக்கு வங்கியையும் இழந்துள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவால் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? இப்போதும் மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிளவுபட்டுள்ளது.

கதவு அடைப்பு: பீகாரில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் நாளுக்குநாள் கரைந்து வருவதால், அக்கட்சிக்கு, லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி எத்தனை தொகுதிகள் ஒதுக்கப் போகிறாரோ தெரியவில்லை. மேற்குவங்கத்தின் நான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என மம்தா பானர்ஜி கூறிவிட்டார். பாட்னா கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரசுக்கு கதவை அடைத்து விட்டார்.
திமுகவுக்கு நெருக்கடி: எனவே, இப்படிப்பட்ட கட்சிகள் ஓரணியில் இணைந்தால் என்ன? இணையாவிட்டால் என்ன? அதனால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இப்போது 15 தொகுதிகளை கேட்கிறது. மற்ற கூட்டணி கட்சிகளும் அதிக தொகுதிகள் கேட்பதுடன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வருகின்றன.
பாஜக ஹாட்ரிக்: இதனால் திமுக 15 அல்லது 16 தொகுதிகளில்தான் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும். அதிலும் கருணாநிதி மகள், பேரன், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களின் மகன்கள், மகள்தான் போட்டியிட போகிறார்கள். எனவே, பாஜகவை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, திமுகவைப் பற்றி ஸ்டாலின் கவலைப்படுவதே சரியாக இருக்கும். ஏனெனில், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications