இத்தோடு நிறுத்திக்கங்க.. இல்லாவிட்டால்.. சூர்யாவிற்கு எதிராக அடுத்த லெவலுக்கு போன பாஜக!
சென்னை: மாணவர்களை குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவல்களை சூர்யா பரப்புகிறார் என்றும், இத்துடன் நிறுத்திக்கொள்ளாவிட்டால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூர்யாவிற்கு எதிராக பாஜக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Recommended Video
நடிகர் சூர்யா மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை நீட் தேர்வு , ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் போன்றவற்றுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார். இதனால் கோபம் அடைந்த பாஜகவினர் அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
பாஜகவை குறிவைத்து சூர்யா செயல்படுவதாவும் அவர்கள் சந்தேகின்ன்றனர். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தில் பலமாக இருந்தாலும், மற்ற எந்த நடிகரோ, அல்லது அரசியல் கட்சி தலைவர்களோ சூர்யாவை போல் கோபமாக கருத்துக்களை வெளியிடவில்லை.

சூர்யா அறிக்கை
நடிகர் சூர்யா கடந்த ஜூன் 19ம் தேதி நீட்தேர்வுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையில், "அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது.

அநீதி
எளிய குடும்பத்தினர் கல்வி பெற ஆதாரமாக இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் முறையே 40% மற்றும் 25% மாணவர்களில், 20% மாணவர்களே உயர்கல்விக்குச் செல்கின்றனர். தங்கள் எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்த பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவர்களைப் பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி. நீட் நுழைவுத் தேர்வு வைக்கப்படுவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது என்று கடும் கட்டமாக கூறியிருந்தார்.

இலவச கல்வி
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய கல்வியை எதிர்த்து சூர்யா வெளியிட்ட அறிக்கையில்,. "கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது, ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விபரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது. அப்படிப்பட்ட மனசாட்சிதான், ஏழை பணக்காரர் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு. பெற்றோரை இழந்த ஒரு மாணவி இந்திய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றுகிறார். ஆடு மேய்க்கிற பெற்றோரின் மகன் சென்னை ஸ்டான்லியில் மருத்துவர். நீட் தேர்வு மட்டும் இருந்திருந்தால் இவர்கள் யாரும் மருத்துவர்களாகி இருக்க முடியாது என்றும், அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவர்களான மாணவர்கள் தகுதியிலும், தரத்திலும் சிறந்தே விளங்குகின்றனர்." நீட் தேர்வு இருந்திருந்தால் இதெல்லாம் சாத்தியமில்லை என்று கூறியிருந்தார்.

கருத்து சுதந்திரம்
இதேபோல கடந்த ஒளிப்பதிவு வரைவு மசோதாவிற்கு நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக மட்டுமே இருக்கவேண்டும் என்பதாகவும், அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த சட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்வதற்கான இணைப்பையும் ட்வீட் செய்துள்ளார் அவர்.

சூர்யாவிற்கு எதிராக தீர்மானம்
தொடர்ந்து நடிகர் சூர்யா நீட் தேர்வு விவகாரம், கல்வி கொள்கை விவகாரம், மத்திய அரசின் திட்டங்கள் மீது கடும் விமர்சனத்தை முன்வைப்பதை பாஜகவினர் எதிர்த்து வருகிறார்கள். தற்போது அடுத்தகட்டத்தை தாண்டி உள்ளனர். சூர்யாவிற்கு எதிராக பாஜக இளைஞரணி கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மனோஜ் பி செல்வம் கூறுகையில், மாணவர்களை குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவல்களை சூர்யா பரப்புகிறார். மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை உள்நோக்கத்துடன் எதிர்க்கிறார். இத்துடன் நிறுத்திக்கொள்ளாவிட்டால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications