பழங்குடியினரின் பாதையை தடுப்பது... வன்கொடுமை தடைச் சட்டப்படி குற்றம் -உயர்நீதிமன்றம்
சென்னை: பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் பாதையை தடுப்பது வன்கொடுமை தடைச் சட்டப்படி குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுப்பையன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
இதனிடையே இந்த வழக்கின் விவரம் பின்வருமாறு;
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நீலகிரி தேயிலை எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில், செங்குட்ராயன் மலை கிராமத்தில் இருந்து மஞ்சகோம்பை - குள்ளகம்பி பிரதான சாலை வரை செல்லும் வண்டிப்பாதை அமைந்துள்ளது.

மலைப்பகுதியில் அமைந்துள்ள சிறிய தேயிலை தோட்டங்களுக்கும், பழங்குடியினர் கிராமங்களுக்கும் செல்ல இந்த வண்டிப்பாதை பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நீலகிரி தேயிலை எஸ்டேட் நிறுவனத்தினர் இந்த பாதையை மறித்து கேட் அமைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, கேட் பூட்டப்பட மாட்டாது என எஸ்டேட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த வாக்குறுதியை மீறி, கேட்டை பூட்டி வைத்திருப்பதால் மலைவாழ் மக்களின் போக்குவரத்தும், சிறிய தேயிலை விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சுப்பையன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நிலம் எஸ்டேட் நிர்வாகத்துக்கு சொந்தமானதாக இருந்தாலும், பல ஆண்டுகளாக பொது பாதையாக பயன்படுத்தப்பட்ட வண்டிப்பாதையை மறிக்க முடியாது எனவும், பழங்குடியின மக்களை தடுப்பதால் இது வன்கொடுமை தடைச் சட்டப்படி குற்றம் எனவும் கூறி, தடுப்பை ஒரு வாரத்தில் அகற்ற உத்தரவிட்டார்.
மேற்கொண்டு எந்த தடுப்பை ஏற்படுத்தினாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.
பழங்குடியின மக்களை பொறுத்தவரை தங்களுக்கென காலம் காலமாக தனிக் கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்களை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இயற்கை வழிச் சூழலில் வாழ்வதையே அவர்கள் பெரிதும் விரும்புவார்கள். பழங்குடியினருக்காக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தாலும் அது குறித்து அவர்களுக்கு முழுமையான தகவல் சென்று சேருவதில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications