சென்னை மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு.. பட்டப்பகலில் நடந்த ஷாக் சம்பவம்
சென்னை: சென்னை மாநகராட்சியின் 196வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கண்ணகி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கண்ணகி நகர் 8வது குறுக்குத் தெருவில் 196வது வார்டு மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு வார்டு கவுன்சிலர் அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த வார்டு கவுன்சிலராக அதிமுகவைச் சேர்ந்த அஸ்வினி கருணா உள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை டூவிலரில் வந்த இருவர், அலுவலகத்தில் கவுன்சிலர் உள்ளாரா எனக் கேட்டுவிட்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளனர். நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அங்கிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. நாட்டு வெடிகுண்டு வீசியதும் அங்கிருந்த மக்கள் பயத்தில் சிதறி ஓடினர்.
தலைநகரில், மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் பட்டப் பகலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கண்ணகி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வீசிய இருவரைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications