சென்னையில் 3 இடங்களில் குண்டு வெடிக்கும்.. இமெயிலில் வந்த மிரட்டலால் பரபரப்பு! சல்லடை போட்ட போலீசார்
சென்னை: சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையம், சென்னை நந்தனம் ஒய்.எம்சி.ஏ வளாகம், பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ கட்டிடம் ஆகிய இடங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்ததால் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியோடு விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் எங்கும் வெடிகுண்டு கண்டறியப்படவில்லை.
எனவே, பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை விமான நிலையத்தில் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான பயணிகள், உடைமைகள், விமானங்களில் ஏற்றப்படும் பார்சல்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் இருந்து விமானங்களில் பயணிக்க வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர். விமானம் தனிமைப் படுத்தப்பட்டு தீவிரமாக சோதனை செய்யப்பட்டது.
அதில் சந்தேகப்படும்படியான பொருள் ஏதும் சிக்கவில்லை. இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது இரண்டாவது முறை. கடந்த வாரம் டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications