முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..திடீரென வந்த அழைப்பால் பரபரப்பு.. இரவில் பேசிய இளைஞர் யார்?
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் எதிர்முனையில் பேசிய நபர், 'இன்னும் ஒரு மணி நேரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு உட்பட, பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது' என கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
இந்த அழைப்பு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தேனாம்பேட்டை காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

தொலைபேசியில் அழைத்தது யார்?
இதன்பின்னர் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த தொலைபேசி அழைப்பில் மர்ம நபர் பேசியிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, சைபர் க்ரைம் உதவியுடன் மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்ட செல்போன் எண்ணை அடிப்படையாக வைத்து துப்பு துலக்கினர்.

வார்டு பாய் செல்போன் கண்டுபிடிப்பு
இதையடுத்து, மிரட்டல் விடப்பட்ட நபர் பயன்படுத்திய மொபைல் போன் எண் மற்றும் சிக்னல் டவரை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அது, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையை காண்பித்தது. அங்கு விரைந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி, வார்டு பாய் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், நான் மிரட்டல் விடுக்கவில்லை. என் மொபைல் போன் சிறிது நேரம் காணவில்லை. யாரோ எடுத்துச் சென்று, மீண்டும் எடுத்து வந்து வைத்துள்ளனர் என கூறியுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டவரா?
தொடர் விசாரணையில், அங்கு சிகிச்சை பெற்று வரும், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்பவர், வார்டு பாய் மொபைல் போனை எடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

மிரட்டால் பரபரப்பு
இவர், ஏற்கனவே நடிகர்கள் மற்றும் முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரிய வந்தது. மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஆழ்வார்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications