உச்சிக்கு உயருது பத்திரப்பதிவு வழிகாட்டு மதிப்பு.. காரணம் இதுதானா? தமிழக அரசுக்கு பறக்கும் கோரிக்கை
சென்னை: வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவதால், தமிழக அரசு இதுகுறித்து என்ன முடிவெடுக்க போகிறது? என்ற ஆர்வம் பெருகி வருகிறது.
வழிகாட்டி மதிப்பு என்பது நிலவிவகாரங்களில் மோசடிகளை தடுக்கவும், அந்த மோசடிகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.. அதேபோல, பதிவுக் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க முயல்பவர்களையும் கண்டுபிடிக்க உதவுகிறது.. இதனால், நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளில் நடக்கும் ஊழல் மற்றும் மோசடிகளை எளிதாக தடுக்க முடியும்..
விளக்கம்: இந்நிலையில், வழிகாட்ட மதிப்பு உயர்த்தப்பட்டதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அதுகுறித்து பதிவுத்துறை உடனடியாக ஒரு விளக்கம் தந்திருந்தது.

அதன்படி, அனைத்து தெரு மற்றும் சர்வே எண்களுக்கும், வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படவில்லை, குறைந்தபட்ச மதிப்பை விட குறைவாக உள்ள தெரு மற்றும் சர்வே எண்களுக்கு மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளதே தவிர, தமிழகத்தில் அனைத்து இடங்களிலுமே வழிகாட்டி மதிப்பு மாற்றப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.
என்ன காரணம்: இந்நிலையில், வணிக மனைகளுக்கு வழிகாட்டி மதிப்பு மூன்று மடங்கு உயர்த்த போவதாக, கடந்த 2 நாட்களாகவே தகவல்கள் பரபரக்கின்றன.. இதற்கு என்ன காரணம்?
குறிப்பாக, புதிதாக தொழில் தொடங்குவோர், புதிய வணிக நிறுவனர்கள் தொழிலுக்கு வருவதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சொத்து பரிமாற்றத்திலும், மிகப்பெரும் மந்த நிலையை ஏற்படுத்திவிடும், வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்துவிடும், அரசுக்கான வரி வருவாய் குறைவதற்கான வாய்ப்புகளும் உருவாகும் என்பதால், வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டுமென்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக்கொண்டுள்ளனர்.
விவசாய நிலங்கள்: குடியிருப்பு நிலங்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு, சதுர அடிக்கு, 300, 500 ரூபாய் என்றும், விவசாய நிலங்களின் குறைந்தபட்ச மதிப்பு, ஒரு ஏக்கர், 2 லட்சம், 3 லட்சம், 5 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையிலும் சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டது. இந்த நடைமுறை, தற்போது அமலுக்கும் வந்துள்ளது..
எனினும், வணிக பயன்பாட்டில் உள்ள மனைகளின் மதிப்பு மட்டும் குறைவாக இருக்கிறதே? என்று புகார் எழுந்தது.. எனவே, புதிய பத்திரங்கள் பதிவுக்கு வரும் நிலையில், அதில் வணிக பயன்பாடு உள்ளதா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், கிராம வாரியாக வணிக பயன்பாடு உள்ள சர்வே எண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவைகளின் குறைந்தபட்ச மதிப்புகள் மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
குறைந்தபட்ச மதிப்பு: அந்தவகையில், ஒரு பகுதியில், குடியிருப்புக்கு குறைந்தபட்ச மதிப்பு சதுர அடிக்கு, 300 ரூபாயாக இருந்தால், வணிக மனைக்கு குறைந்தபட்ச மதிப்பு, சதுர அடிக்கு, 900 ரூபாயாக அதாவது 3 மடங்காக மதிப்பு உயர்வு இருக்கலாம் என்கிறார்கள். எப்படியும், வரும் நவம்பர் 1ம் தேதி முதல், புதிய குறைந்தபட்ச மதிப்புகளை அமல்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
எனவேதான், வணிக மனைகளுக்கு வழிகாட்டி மதிப்பு மூன்று மடங்கு உயர்த்துவதற்கு இப்போதே அதிருப்திகளும், கோரிக்கைகளும் வெடித்து கிளம்பி உள்ளன. அதேபோல, இதற்கு ஆதரவும், எதிர்ப்புமான கருத்துக்களும் இணையத்தில் உலாவர தொடங்கிவிட்டன.
விமர்சனங்கள்: இது, சாதாரண மக்களின் தலையில் விழும் இன்னொரு சுமை என்றும், பத்திரப்பதிவு வரி சதவீதத்தை 2, 3 மூன்று சதவீதமாக குறைத்துவிட்டு, வழிகாட்டி மதிப்பை சந்தை மதிப்பிற்கு கொண்டு வந்தால் சாதாரண மக்களிடம் கறுப்புப்பணம் வருவது தானாக குறையுமே என்றெல்லாம் கருத்துக்கள் குவிகின்றன.. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும், தமிழக அரசு என்ன முடிவெடுக்க போகிறது? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications