உங்க IRCTC கணக்கில் நண்பர்களுக்கு ரயில் டிக்கெட் புக் செய்வது குற்றம்.. சிறை தண்டனை கூட கிடைக்குமாம்
சென்னை: நமது நாட்டில் ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இதற்காகப் பல வாரங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்வது கட்டாயமாகிறது. இதுபோல நாம் நண்பர்கள் உட்பட மற்றவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்திருப்போம். ஆனால், இனி அப்படிச் செய்தால் உங்களுக்குச் சிறைத் தண்டனை கூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
நமது நாட்டில் மிக முக்கியமான பொது போக்குவரத்தாக இருப்பது ரயில்கள் தான். நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் செல்லலாம்.. டிக்கெட் செலவும் குறைவு, கழிப்பறை தொடங்கிய பல்வேறு வசதிகளும் கூட இருப்பதால் மக்கள் ரயில்களில் பயணிக்கவே விரும்புகிறார்கள்.

ரயில்கள்: என்ன தான் விமானம், பஸ் எனப் பல வசதிகள் வந்தாலும் அவை ரயில்களைப் போலச் சவுகரியமாக இருக்காது. இப்படி ரயிலில் பயணிப்பது ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதால் பலரும் ரயிலில் பயணிக்கவே விரும்புகிறார்கள். ஆனால், இப்போதெல்லாம் ரயில்களில் டிக்கெட் எடுப்பதே குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. குறைந்தது சில வாரங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்தால் மட்டுமே ரயிலில் டிக்கெட் கிடைக்கிறது. அதிலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பல மாதங்களுக்கு முன்பாகவே டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிடுகிறது.
இதனால் ரயில் பயணங்களுக்கு முன்கூட்டியே டிக்கெட் புக் செய்வது கட்டாயமாகிறது. இணையத்தில் இதுபோல முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளத்தில் கணக்கு வைத்திருப்பது கட்டாயமாகிறது. அதேநேரம் அனைவரிடமும் இந்த ஐஆர்சிடிசி கணக்கு இருக்காது. இதனால் பொதுவாக நண்பர்களைத் தான் நாம் டிக்கெட் போடச் சொல்வோம்.
ரூல்ஸ்: இது வழக்கமாக நடப்பது தானே என நீங்கள் கேட்கலாம்.. ஆனால், இதுவே உங்களுக்குக் கடுமையான அபராதம் அவ்வளவு ஏன் சிறைத் தண்டனையைக் கூடப் பெற்றுத் தரும் ஆபத்து இருக்கிறது. ஏனென்றால் உங்களின் தனிப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கு மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்தியாவின் கடைக்கோடி ரயில் நிலையம்! ஆனால் எந்த ரயிலும் நிற்காது! ஏன் தெரியுமா?
இதற்காகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். ரயில்வே சட்டத்தின் 143வது பிரிவின்படி, ரயில்வே ஊழியர்கள் அல்லது அங்கீகாரம் பெற்ற ஏஜெண்டுகளால் மட்டுமே மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தர முடியும். இதற்கான அதிகாரம் அவர்களிடம் மட்டுமே உள்ளது. இந்த விதியை மீறினால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
கவனம்: இந்த தனிப்பட்ட கணக்கைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட அந்த நபர் தாங்கள் பயணிக்க டிக்கெட் புக் செய்யலாம்.. ரத்த உறவுகளுக்கு மற்றும் குடும்பத்தினருக்கும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தரலாம்.. அதேநேரம் நண்பர்கள் உட்பட மற்றவர்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அதை பிஸ்னஸ் போல நடத்தி வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதற்காக ரூ. 10,000 அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் கூட விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
தனிப்பட்ட கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படியொரு சட்டம் இருப்பதால் அடுத்த முறை நண்பர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து தரும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை நன்கு யோசியுங்கள்.












Click it and Unblock the Notifications