ஸ்டாலினும் இல்லை.. அண்ணாமலையும் இல்லை.. ஒரே நாளில் வெளிநாடுகளுக்கு பறக்கும் தமிழக அரசியல் தலைவர்கள்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்றிரவு வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்கிறார். அதேநேரம் மறுபுறம் பாஜக மாநில தலைவரான அண்ணாமலை தனது மேற்படிப்பிற்காக லண்டன் செல்கிறார். இப்படி ஒரே நேரத்தில் இரு முக்கிய அரசியல் தலைவர்கள் வெளிநாடு செல்கிறார்கள். இரு முக்கிய தலைவர்கள் இல்லாத நிலையில், தமிழக அரசியல் களம் அடுத்த ஒரு மாதம் எப்படி இருக்கும் என்பதில் பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பதே தனது இலக்கு என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின், இதற்காக மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அவர் ஏற்கனவே ஐக்கிய அமீரகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார். அடுத்த கட்டமாக அவர் இப்போது அமெரிக்காவுக்குச் செல்கிறார்.
முதல்வர் அமெரிக்கப் பயணம்: அதாவது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்கிறார். இன்றிரவு சென்னை ஏர்போர்ட்டில் இருந்து அமெரிக்கா புறப்படும் அவர், செப்டம்பர் 12ஆம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் அங்குப் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முதற்கட்டமாக சான் பிரான்சிஸ்கோ நடக்கும் முதலீட்டாளர் மாநாட்டில் ஆக.28ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
அடுத்து ஆகஸ்டு 31ஆம் தேதி அதே சான் பிரான்சிஸ்கோவில் புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் உரையாடுகிறார். மேலும், அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்களையும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாகச் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது அவர் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பார்.
பயணத் திட்டம்: செப். 2ம் தேதி சிகாகோ செல்லும் முதல்வர் ஸ்டாலின், 10 நாட்கள் அங்குத் தங்கிப் பல நிறுவனங்களின் சிஇஓக்களை சந்திக்கிறார். குறிப்பாக ஃபார்ச்சூன் 500 எனப்படும் உலகின் டாப் நிறுவனத் தலைவர்களைச் சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம். அதைத் தொடர்ந்து செப். 12ம் தேதி அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் தமிழகம் திரும்புகிறார். இப்படி 17 நாட்கள் முதல்வர் அமெரிக்காவில் இருக்கப் போகிறார்.
அண்ணாமலை: ஸ்டாலின் முதலீட்டாளர்களை ஈர்க்க அமெரிக்கா செல்லும் நிலையில், மறுபுறம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வெளிநாடு செல்கிறார். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் என்ற தலைப்பில் சான்றிதழ் படிப்பிற்காக அண்ணாமலை லண்டன் செல்கிறார். இதற்காக இன்று நள்ளிரவு அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார்.
இடைக்கால தலைவர்: வரும் ஜனவரி மாதம் வரை அண்ணாமலை லண்டனில் தங்கிப் படிக்கவுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கட்சியிடம் உரிய அனுமதி பெற்றுவிட்டே வெளிநாடு செல்வதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் அடுத்த 4 மாதங்களுக்கு பாஜகவில் மாநில தலைவர் இல்லாத சூழல் இதன் காரணமாக சுமார் 4 மாதங்கள் பாஜக மாநில தலைவர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகத் தமிழக பாஜகவில் இடைக்கால தலைவராக ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications