நெஞ்சில் பச்சை குத்திய தாடி பாலாஜிக்கே இந்த நிலையா? தவெக விழாவில் தடுத்து நிறுத்திய பவுன்சர்கள்
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நடிகர் தாடி பாலாஜி சமீபத்தில் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பேசும் பொருளானது. விஜயின் முகத்தை தனது நெஞ்சில் தாடி பாலாஜி பச்சை குத்தி உள்ளார். இந்நிலையில் தான் சென்னையில் இன்று நடந்த 2ம் ஆண்டு கட்சி தொடக்கவிழா கூட்டத்தில் பங்கேற்க சென்ற தாடி பாலாஜியை பவுன்சர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். தற்போது மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். இதன்மூலம் 2026ம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அவர் முழுவீச்சில் தயாராகி விட்டார்.

இந்நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் தாடி பாலாஜியும் வந்தார். நடிகர் விஜயுடன் திரைப்படங்களில் நடித்த தாடி பாலாஜி அவர் கட்சி தொடங்கியதும் அதில் தன்னை இணைத்து கொண்டார். அதன்பிறகு நடிகர் விஜயின் முகத்தை தனது மார்பில் பச்சை குத்தினார். இதுதொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டு இருந்தார். சமீபத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் நியமனத்தின்போது தாடி பாலாஜிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
அந்த சமயத்தில் தாடி பாலாஜி தனது வாட்ஸ்அப்பில் வைத்த ஸ்டேட்டஸ் பேசும்பொருளானது. . அதில் 'அவளோ புது பாய் பிரண்டுடன் சந்தோஷமாக இருக்கிறாள். தற்குறி நான் அவளின் நினைவுகளோடு' என எழுதப்பட்டு இருந்தது. அதில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை வரவேற்பது போலவும், தாடி பாலாஜி விஜயின் உருவத்தை மார்பில் பச்சை குத்தியபோது எடுத்த போட்டோவையும் இணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் தவெகவில் பதவி வழங்காததால் தாடி பாலாஜி தனது அதிருப்தியை ஸ்டேட்டஸ் மூலம் வைத்துள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் தாடி பாலாஜி வீடியோ வெளியிட்டு அதற்கு விளக்கம் அளித்தார். அதிருப்தி எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் நடிகர் தாடி பாலாஜி இன்றைய விழாவில் பங்கேற்க பூஞ்சேரிக்கு சென்றார். அப்போது அவரை உள்ளே விடாமல் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். பாஸ் இல்லை என்று கூறி அவரை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதையடுத்து தாடி பாலாஜி 15 நிமிடங்கள் வரை அங்கேயே காத்திருந்தார். அதன்பிறகு கட்சி மேலிடம் கூறியதை தொடர்ந்து தாடி பாலாஜி விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக இந்த விழாவில் பங்கேற்க 2,500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. பாஸ் இருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சிலர் போலி பாஸ்களை தயாரித்து உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை வெளியேற்றினர். இந்த சம்பவம் இன்றைய நடிகர் விஜயின் விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications