ஸ்ரீரங்கம் கோவிலில் மோடி பேச்சு ஒளிபரப்பு - அண்ணாமலை மீது நடவடிக்கை கோரும் கேஎஸ் அழகிரி
பிரதமர் மோடி கேதார்நாத்தில் ஆற்றிய விடியோ உரையை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்ட பாஜகவின் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேஎஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: சட்டத்திற்குப் புறம்பாக பிரதமர் மோடியின் வீடியோவை ஸ்ரீரங்கம் கோவிலில் ஒளிபரப்பு செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் கடந்த ஐந்தாம் தேதி அகன்ற திரை மூலம் மோடியின் பேச்சு ஒளிபரப்பானது. பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் தலைமையில் நிகழ்ந்த இந்நிகழ்வை ரங்கராஜ் நரசிம்மன் என்ற தீவிர வைஷ்ணவர் தவறென்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்ணாமலையை கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ரங்கராஜ் நரசிம்மன் குற்றம் சாட்டியுள்ளார். மோடியின் பேச்சை கோவிலில் ஒளிபரப்பியதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் நேருவின் 133 பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் கே எஸ் அழகிரி நேருவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, எதிர்பார்த்ததை விட ஐந்து மடங்கு மழை பெய்துள்ளதால் மத்திய அரசு உடனடியாக ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசுக்கு நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மோடி கேதார்நாத்தில் ஆற்றிய விடியோ உரையை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சட்டத்திற்கு புறம்பாக வெளியிடப்பட்டிருக்கிறது இதனை பக்தர் ஒருவர் செய்தியாக வெளியிட்டிருப்பதாக கூறினார்.
1988ஆம் ஆண்டு சட்டத்தின்படி அரசியல் சார்ந்த பரப்புரைகளை வழிபாட்டு தலங்களில் வெளியிடக்கூடாது என்றும் அத்துமீறி வெளியிடுபவர்கள் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கபடும் என்றும் இருப்பதால் அண்ணாமலை மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கோவை மாணவியின் தற்கொலை குறித்த கேள்விக்கு பதிலளித்த கேஎஸ் அழகிரி, குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் கூடாது அது அருவருப்பான விஷயம் என்றார். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு, எது சரி எது தவறு என்பது குறித்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேஎஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.