மத்திய பட்ஜெட் தேசத்துக்கானது அல்ல.. ஒரு சாராருக்கானது.. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை!
சென்னை: மத்திய பட்ஜெட் தேசத்துக்கானது அல்ல, அது ஒரு சாராருக்கானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஓரிரு மாநிலங்களுக்காக மட்டுமே பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என்றும் விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கேற்ப பீகாரில் புதிய விமான நிலையம், பாட்னா ஐஐடி விரிவாக்கம், தொழிற்சாலைகள், வேளாண் திட்டங்கள் என்று மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் உரை தொடங்கப்பட்ட முதல் 30 நிமிடங்களுக்குள்ளாகவே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பீகார் மாநிலத்தின் பெயரை 4 முறை உச்சரித்திருந்தார். இதனால் நாடாளுமன்ற அவையிலேயே அமளி ஏற்பட்டது. இருப்பினும் கடைசியாக தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இதனால் 8 கோடிக்கும் அதிகமான மக்கள் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது இனி இந்தியாவில் மாதம் ரூ.1 லட்சம் ஊதியம் பெறும் யாருக்கும் வருமான வரி கிடையாது என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரூ.75 ஆயிரம் கழிவு இருக்கும் என்பதால், ரூ.12.75 லட்சம் வரை யாருக்கும் வருமான வரி இருக்காது என்ற அறிவிப்பு வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களின் ஊதியம் அவர்களுக்காக செலவு செய்யும் நிலை உருவாகும். இதனால் பாஜக தலைவர்கள் பட்ஜெட் வாசித்து முடிக்கும் முன்பாகவே கொண்டாடப்பட்ட பட்ஜெட் இதுதான் என்று மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், மத்திய பட்ஜெட் தேசத்துக்கானது அல்ல, அது ஒரு சாராருக்கானது. ஓரிரு மாநிலங்களுக்காக மட்டுமே நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என்று விமர்சித்துள்ளார். மேலும், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications