ஊரடங்கு தளர்வு.. சென்னையிலிருந்து ஓடத் தொடங்கின பஸ்கள்.. பயணிகளுக்கு நிபந்தனைகள்
சென்னை: ஊரடங்கு உத்தரவில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட ஆரம்பித்துள்ளன.
50% பயணிகளுடன், முக கவசம் கட்டாயம் என்ற அறிவிப்புடன் இந்த பஸ் சேவை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல கூடிய அனைத்து விதமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி சலுகை
ஏற்கனவே, கொரோனா அதிகமாக இருந்ததால் 11 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆனால் இப்போது எல்லா மாவட்டங்களிலும் ஒரேமாதிரி சலுகைகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே, மாவட்டங்களுக்கு உள்ளேயும் அதேபோன்று மாவட்டங்களுக்கு வெளியேயும், செல்லக் கூடிய அனைத்து வகை பேருந்துகளையும் இயக்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கிறது.

19 ஆயிரம் பஸ்கள்
அதனடிப்படையில், பயணிகளுக்கு வசதியாக பயணிக்க தேவையான நடவடிக்கையை போக்குவரத்துறை அதிகாரிகள் எடுத்திருக்கிறார்கள். தமிழகம் முழுவதுமே, இயங்குவதற்கு, 19,000 பேருந்துகள் தயாராக இருக்கிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை பொருத்தவரை 3000 பேருந்துகள் வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்காக தயாராக இருக்கிறது.

கோயம்பேடு நிலவரம்
இன்று காலை முதல் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். கோயம்பேட்டில் 6 நடைமேடைகளில் இதற்கான நடவடிக்கை தொடங்கி பஸ்கள் இயங்கி வருகின்றன. பாதுகாப்பு விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் செய்யப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்
50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முககவசம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை செய்து பயணிகளை உள்ளே அனுமதித்து வருவதை பார்க்க முடிகிறது.

ஒலி பெருக்கி அறிவிப்பு
பயணிகள் எந்தெந்த மாதிரி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது ஒலிபெருக்கி மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிக்கப்பட்டு வருகிறது. பேருந்து சேவை பயணிகளுக்கு பலனுள்ளதாக இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

அவசர தேவைக்கு மட்டும்
கொரோனா தொற்று பயம் காரணமாக அதிகளவு பயணிகள் வெளிமாவட்டங்களுக்கு செல்ல வில்லை என்றாலும் அவசர தேவைக்காக மட்டும் செல்கிறார்கள். வட மாவட்டம், மதுரை மண்டலம், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து விதமான பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications