சென்னையிலும் ஒரு தொழிலதிபர் தற்கொலை.. லெட்டர் எழுதி வைத்து விட்டு.. மாடியிலிருந்து குதித்து!
சென்னையில் தொழிலதிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: தொழில் அதிபர் சித்தார்த்தா லெட்டர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னும் ஓய்ந்து முடிக்காத நிலையில், சென்னையில் இன்னொரு தொழில் அதிபரும் லட்டர் எழுதி வைத்துவிட்டு இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை கீழ்பாக்கம் தம்புசாமி தெருவில் உள்ள பிரின்ஸ் கார்டன் என்ற குடியிருப்பில் 3-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் தேவேந்திர மேத்தா. இவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர்.
இந்நிலையில், இன்று காலை 3-வது மாடியில் இருந்து அதாவது தன் வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்து விட்டார். இதில், மேத்தாவுக்கு தலையில் பலமான அடிபட்டது.
திடீரென ஒருவர் மாடியில் இருந்து குதிப்பதை பார்த்த அங்கிருந்தோர், உடனடியாக ஓடிவந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் மேத்தா வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள். இதையடுத்து போலீஸ் விசாரணை ஆரம்பமானது.
விரைந்து வந்த போலீசார், மேத்தாவின் வீட்டில் ஒரு கடிதத்தை கைப்பற்றினார்கள். அதில், "தன் சாவுக்கு யாரும் காரணமில்லை.. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதே என் முடிவுக்கு காரணம்" என்று எழுதியிருந்தார். இந்த கடிதம் மேத்தா எழுதியதுதானா, அவரது இறப்புக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்று போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.