அமைச்சர் கனவில் திமுக புதுமுக எம்.எல்.ஏ.க்கள்! சென்னையில் முகாமிட்டு லாபி! யாருக்கு ஏறுமுகம்?
சென்னை: தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுகவில் உள்ள புதுமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் அமைச்சர் கனவில் உலா வருகின்றனர்.
இரண்டு அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள் என தகவல் கசிந்துள்ள நிலையில், அந்த இடங்களை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ள சில எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் முகாமிட்டு லாபி செய்து வருகின்றனர்.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்களை நிகழ்த்த முடிவு செய்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த 2 ஆண்டுகளில் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் எப்படி செயல்பட்டிருக்கின்றனர், துறைவாரியாக எப்படியெல்லாம் பணியாற்றியிருக்கின்றனர், என்னென்ன சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர், என்னென்ன புகார்கள் வந்துள்ளன என அலசி ஆராய்ந்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதன் அடிப்படையிலேயே அமைச்சரவை மாற்றத்தை நிகழ்த்தவும் அவர் ஆயத்தமாகி வருகிறார். மேலும், ஜெயலலிதாவை போல் சுழற்சி முறையில் புதுமுகங்களுக்கும் அமைச்சர் பதவி கொடுத்தால் தான் கட்சியினர் மத்தியில் புதிய நம்பிக்கை பிறக்கும் என்பதும் முதல்வரின் கணக்காக உள்ளது.
அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்ட ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே கடந்த 2 ஆண்டுகளில் ஒரு சர்ச்சையில் கூட சிக்காமல் தாங்கள் உண்டு தங்கள் பணி உண்டு என்றிருந்திருக்கிறார்கள்.
மற்றபடி மூத்த அமைச்சர்கள் உட்பட பலரும் கூட ஏதேனும் ஒரு வகையில் சர்ச்சையில் சிக்கி முதல்வருக்கு நெருக்கடியையும், தர்ம சங்கடமான சூழலையும் ஏற்படுத்தியிருக்கின்றனர்.
இரண்டு இடங்களுக்கு இருபத்துக்கும் மேற்பட்டோர் முட்டி மோதும் நிலையில் யாருக்கு ஏறுமுகத்தை கொடுக்கப் போகிறார் முதல்வர் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications