கைரேகை மூலம் ஆதார் விவரங்களை பெற முடியுமா.. சென்னை ஐகோர்ட் வழக்கில் தெரிய வந்த பெரிய உண்மை
சென்னை: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டிஎஸ்பி தொடர்ந்த வழக்கில் வாதங்கள் மற்றும் தீர்ப்பின் அடிப்படையில் பார்க்கும் போது, ஆதார் தரவுகளை வைத்து ஒருவரின அடையாளங்கள் அரசு பகிராது என்பதை தாண்டி, தடயவியல் நோக்கங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் தற்போதைய நவீன நடைமுறைகளின் அடிப்படையில் பயோ மெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படுவதில்லை என்பது தெரியவந்தது. கைரேகை மூலம் ஆதார் விவரங்களை பெற முடியுமா என்பது பற்றியும் பார்ப்போம்.
ஆதார் இல்லாமல் யாருமே இல்லை என்கிற அளவில் நிலைமை மாறிவிட்டது. ஒருவர் யார் என்பதை கண்டுபிடிக்க அவரது கைரேகை அல்லது கண் கருவிழி ரேகையை வைத்து கண்டுபிடிக்க ஆதாரை பயன்படுத்தலாம் என்ற யோசனைகளை பலரும் கூறி வருகிறார்கள். அதாவது ஒருவரின் கைரேகையை வைத்தே அவர் யார், அவரது புகைப்படம் மற்றும் அவரை பற்றிய தகவல்களை அறிய ஆதாரை பயன்படுத்தலாமே என்ற யோசனைகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஆதார் தரவுகள்
எப்படி பான் கார்டை வைத்து ஒருவரின் வருமானத்தை அறிய முடிகிறதோ, அதேபோல் கைரேகை மூலம் ஆதார் தகவல்களை அறிய முடியும் என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும், அரசு நிறுவனங்கள் இதன் மூலம் அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியும் என்றும் திருடர்களை எளிதாக கண்டுபிடித்து விட முடியும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இது நடைமுறையில் சாத்தியமா அல்லது அந்த அளவிற்கு தொழில்நுட்பங்கள் இந்தியாவில் ஆதார் தரவு சேமிக்க பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்விகள் எழாமல் இல்லை. அதற்கான விடை விழுப்புரம் போலீசின் வழக்கில் தெரியவந்துள்ளது.
விழுப்புரம் போலீஸ் வழக்கு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அடையாளம் தெரியாத பிணம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து இறந்தவர் யார் என்பதை கண்டறிய அவரது கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்த்து விவரங்களை வழங்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டிவனம் டிஎஸ்பி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். அப்போது ஆதார் ஆணையத்தின் துணை இயக்குநர் பிரியா ஸ்ரீகுமார் பதில் மனு தாக்கல் செய்தார்.
ஆதார் ஆணையம் பதில்
அந்த பதிலில் கூறுகையில், "இந்தியாவில் வசிக்கும் குடிமகன்களை முறையாக கணக்கிட்டு அவர்களுக்கான நிதி, அரசின் சேவைகள், மானியங்கள் சரியான பயனாளிகளுக்கு வெளிப்படையாக சென்றடையும் நோக்கத்தில் தான், 12 இலக்க ஆதார் எண் சட்ட ரீதியாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்தியாவில் உள்ள தனி நபர்களின் பிரத்யேக ஆதார் தொடர்பான விவரங்கள் மற்றும் உருவாக்கப்பட்ட பயோமெட்ரிக் அடையாளங்களை வேறு எந்த காரணங்களுக்காகவும் யாருக்கும் சட்ட ரீதியாக பகிர முடியாது. அடையாளம் தெரியாத இறந்த நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பதும் சாத்தியமில்லாத காரியம்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
மத்திய அரசு பதில்
மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதிடுகையில், "ஒரு தனிப்பட்ட நபருக்கு வழங்கப்படும் 12 இலக்க ஆதார் எண்ணைக் கொண்டு அவருடைய கைரேகைகள் மற்றும் கருவிழி போன்றவை பயோமெட்ரிக் தரவுகளுடன் பொருந்துகிறதா? என்பதை மட்டுமே பரிசோதிக்க முடியும். தடயவியல் நோக்கங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் தற்போதைய நவீன நடைமுறைகளின் அடிப்படையில் இந்த பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படுவதில்லை" என்று வாதிட்டார்.
நீதிபதி தீர்ப்பு
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "நாட்டில் சுமார் 140 கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில், 100 கோடி பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர் என்றால், அடையாளம் தெரியாத இ்றந்த நபரின் கைரேகையை இந்தியாவில் உள்ள அனைத்து ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி சாத்தியமாகும்?. இந்த விவகாரத்தில் ஆதார் ஆணையம் உரிய விவரங்களை வழங்க வேண்டும் என போலீசார் எதிர்பார்ப்பது அபத்தமானது. ஒரு குற்ற வழக்கில் புலன் விசாரணை மேற்கொள்ள ஆதார் மட்டுமே தீர்வாக இருக்க முடியாது. விசாரணைக்கு வேறு வழிகளும் உள்ளன. இதுபோன்ற விஷயங்களில் காலத்தை வீணடிக்காமல் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று எனக்கூறி திண்டிவனம் டிஎஸ்பியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கைரேகை மூலம் ஆதார் விவரங்களை பெற முடியாது
இந்த வழக்கில் வாதங்கள் மற்றும் தீர்ப்பின் அடிப்படையில் பார்க்கும் போது, ஆதார் தரவுகளை வைத்து ஒருவரின அடையாளங்கள் அரசு பகிராது என்பதை தாண்டி, தடயவியல் நோக்கங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் தற்போதைய நவீன நடைமுறைகளின் அடிப்படையில் பயோ மெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது. இறந்த நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பதும் சாத்தியமில்லாதது என்பது யுஐடிஏஐ கூறியுள்ளதால், ஒருவர் யார் என்பதை கைரேகையை வைத்து கண்டுபிடிக்க இயலாது என்பதும் உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications